சபரிமலை + சில புண்ணிய தலங்கள் பயண அனுபவம் படங்களுடன்...! 150 வது பதிவு...!

இதுவரை பெரும்பாலும் நேராக மலைக்கு சென்றுவிட்டு பழனி வந்து ஊருக்கு வருவது வழக்கம் . ஆனால் இந்த தடவை ஒரு சி புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தோம். சென்னை பெரம்பூரில் மதியம் ஒரு மணி அளவில் 16/12/2010 அன்று புறப்பட்டோம். டெம்போ ட்ராவலர் வண்டி மொத்தம் ஒன்பது பேர் மேலும் இருவரை தஞ்சை மாரியம்மன் கோவில் சென்று அழைத்து செல்ல வேண்டும்.

சிதம்பரம்
மதியம் வண்டி புறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் முதலில் சென்றது சிதம்பரம் நடராஜர் கோவில் மாலை ஏழு மணிக்கு போய் சேர்ந்தோம் மார்கழி துவக்கம் கோவிலில் நல்ல கூட்டம் எதோ பூஜை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கோவிலின் வெளி மண்டபத்தில் சீர்காழி சிவ சிதம்பரம் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் கச்சேரி பார்த்துவிட்டு புறப்பட்டோம்.

திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் கச்சேரி

அடுத்து நாங்கள் சென்றது திருவாரூர்.

திருவாரூர்





நள்ளிரவில் திருவாரூரை அடைந்தோம். அங்கேயே இரவு தங்கல் . மார்கழி அதிகாலையில் கோவிலில் மரகத லிங்க அபிசேகம் நடைபெறும் அதை காண்பது என ஏற்பாடு. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தெப்ப குளத்தில் தொப்பென விழுந்து குளித்துவிட்டு அரைகுறை ஈரத்துடன் குளிர் நடுக்கத்தில் கோயிலுக்குள் சென்றோம். அபிஷேகம் முடிந்தவுடன் கிளம்பினோம் தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து எங்களுடன் வர இருந்தவர்களை அழைத்து செல்ல வண்டி புறப்பட்டது செல்லும் வழியில் எண்கண் முருகன் கோவில் இருந்தது .
எண்கண் முருகன் கோவில்


சிக்கல் முருகன் கோவில் சிலை வடித்த சிற்பியான சில்பமுனிவரின் கட்டை விரலை வெட்டி விடுகிறான் சோழ மன்னன் அதுபோல வேறு சிலை செய்ய கூடாது என்பதற்காக..! அடுத்து அதே சிற்பியை வைத்து எட்டுக்குடி முருகன் சிலையை செய்த பின்னர் சில்பமுனிவரின் கண்களையும் தோண்டிவிடுகிறான்
சோழன். கட்டை விரலும் இல்லாமல் கண்களும் இல்லாமல் சில்பமுனிவர் ஒரு சிறுமியின் துணையுடன் செய்ததுதான் இந்த எண்கண் முருகன் சிலை. பிறகு அவருக்கு கட்டைவிரலும் கண்களும் கிடைத்தனவாம் இதுதான் இந்த கோவிலின் மினி வரலாறு. நெக்ஸ்ட் ...

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்

நான் நினைத்ததைவிட கோவில் பெரிதாய் இருந்தது சமய புரம் கோவில் போல இருந்தது . அங்கே நண்பர்கள் இருவரை அழைத்து கொண்டு வண்டி எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு புறப்பட்டது.

எட்டுக்குடி முருகன் கோவில்

சிறிய வயதில் இங்கே வந்தது உண்டு . நல்ல பிரசித்தி பெற்ற கோவில். தரிசனம் முடித்து அங்கேதான் மதிய உணவு . மழை பெய்ய ஆரம்பித்தது . மழையில் நனைந்தபடியே பயணம் ராமேஸ்வரம் நோக்கி தொடர்ந்தது .

அதிக போக்கு வரத்து இல்லாத கிழக்கு கடற்கரை சாலை

இராமேஸ்வரம்



இரவு வந்து சேர்ந்தோம் கடற்காற்று, நல்ல குளிர் அறை எடுத்து தங்கினோம் அதிகாலை எழ வேண்டும். காலை ..கடல் குளியல் அடுத்து அனைத்து தீர்த்தங்களிலும் குளித்துவிட்டு. வண்டியில் ஏறினோம் ராமர் பாதம்,பாம்பன் பாலம்,பார்த்து விட்டு ராமநாதபுரத்தில் மதிய உணவு . அவசரமாக புறப்பட்டோம் மாலைக்குள் திருச்செந்தூர் செல்ல வேண்டும்.

திருச்செந்தூர்




மீண்டும் கடல் குளியல் . செம்மண் நிற கடல் ஜாலியான குளியல். சில இடங்களில் கடலில் பாறைகள் தட்டுபட்டன. அங்கேயே இரவு போஜனம் நள்ளிரவில் நாங்கள் வந்து சேர்ந்தது கன்னியா குமரி.

கன்னியா குமரி


இரவு அறை எடுத்து தங்கினோம். அதிகாலையில் சூரிய உதயம் காண திட்டம் . அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடும் கடற்குளிரில் கதிரவனுக்கு வெயிட்டிங்.
நோ யூஸ் வெளிச்சம் வந்தது சூரியன் வரவே இல்லை. நல்ல பனி மேக மூட்டம்.
ஏமாற்றத்துடன் அறைக்கு திரும்பினோம் பொருட்களை எல்லாம் வண்டியில் வைத்து விட்டு போட்டிங் முடித்து நேராக வண்டிக்கு செல்ல பிளான். ஆனால் அதிலும் மண். கடும் கடல் சீற்றம்,பலத்த காற்று அதனால் படகு போவதை நிறுத்திவைத்து இருந்தார்கள். வெறுப்பாகி கோவத்துடன் குற்றாலம் நோக்கி புறப்பட்டோம்.

குற்றாலம்


எனக்கு மிக பிடித்த இடம் ஆனால் இப்போது பிடிக்கவில்லை. இங்கே வருவதற்கென ஒரு முறை இருக்கிறது அப்படி வரவேண்டும்.
அடுத்து எரிமேலி அங்கிருந்து வண்டி பெரியார் வழியே புல்மேடு சென்று சபரிமலை நோக்கி இறங்கினோம்.காலை ஆறு மணி அளவில் இறங்க துவங்கி நல்ல கூட்டத்தில் தரிசனம் முடித்து இரவுதங்கி அதிகாலை மீண்டும் மலை ஏற்றம் . மதியம் குமுளி.
குமுளி

எப்போதும் சில மளிகை பொருட்கள் இங்கே வாங்குவது வழக்கம். மிளகு,பட்டை,கிராம்பு,ஏலக்காய் மேலும் சில பிரியாணி பொருட்கள்.
அடுத்து நம்ம பழனி.

பழனி



இரவு தங்கி காலை எழுந்து படியேறி முருக தரிசனம் பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு சில பொருட்கள் வாங்கி புறப்பட்டோம். அடுத்து நாங்கள் சென்றது ...................!










போதுங்க............ மலைக்கு போறேன்னு மாலை போட்டுக்கிட்டு அந்த சாக்குல ஊர் சுத்தினது போதும் சீக்கிரமா வீடு வந்து சேருங்கன்னு அவங்கவங்க வீட்டு தங்கமணிகள் சீறவே .... புள்ளையா லட்சணமா வீடு வந்து சேர்ந்தோம்..!


.......................

>