ஆணாதிக்கமும்...! பெண்ணடிமைத்தனமும் ..!

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் பற்றி ஊடகங்களில் அறியப்படும் போது நினைத்து கொள்வேன் இப்படியெல்லாம் நடக்குது போல அப்படின்னு.ஆனால் உண்மையில் அவ்வாறு பேசுகிறவர்கள் ரொம்பவும் மிகை படுத்தி சொல்லுகிறார்களோ என்று. இப்போது தோன்றுகிறது. (இப்போது =கல்யாணத்துக்கு பிறகு)


ஒரு பெண்ணை எந்த ஆண் அடிமை படுத்த முடியும்? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்கள் யார்? யார்? தகப்பன், சகோதரன்,கணவன்,மகன் இந்த நான்கு ஆண்களில் எந்த நிலையில் இருக்கும் ஆண் ஒரு பெண்ணை அடிமை படுத்துகிறான்.

தகப்பன்
எந்த ஒரு பெண்ணும் என் அப்பா ஒரு ஆண்! அதனால் தன் ஆணாதிக்க புத்தியை என் மீது காட்டி அடக்குகிறார் அல்லது, கொடுமை படுத்து கிறார் என சொல்லுவார்கள் என நினைக்க முடியவில்லை.எனவே அப்பாவை விட்டுடுவோம்.

சகோதரன்

பெரும்பாலும் பெண்கள் தன் அண்ணன் தம்பிகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சில,பல இடங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது.ஒரு சகோதரன் தன் சகோதரியை கண்டிக்கும் போது இருவருக்கும் சிறு சல சலப்பு ஏற்படுகிறது. உதரணமாக சகோதரியின் உடை விஷயங்கள் ,வெளியே செல்லும் விசயங்களில் சகோதரன் கண்டிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கே சகோதரிகள் ஒன்றை புரிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். பெண்கள் பேசும் ஒரு வசனம் உண்டு அதாவது ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று. எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.


சில வகை உடைகள் அணிந்து செல்லும் போதோ,அல்லது தனியே வெளியில் செல்லும் போதோ? அந்த சகோதரியின் மீது மற்றவர்கள் பார்வை எப்படி விழும் என்பது அந்த சகோதரனுக்கு நன்றாக புரியும்! அதை அவனால் அவன் சகோதரியிடம் வெளிப்படியாக சொல்லி விளக்க முடியாது.அதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் அந்த சகோதரன் கோபத்தை வெளிப்படுத்தினால் அது அன்பாலும்,அக்கறையாலும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்! அதோடு வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கும் பெண்களுக்கு சகோதரர்கள் முதல் எதிரியாக தோன்றுகிறார்கள்.

ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு கணவனாக வருகிறவன், தன்னை விட அறிவிலும் அந்தஸ்திலும், திறமையிலும் ,வசதியிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறான். அதே சமயம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு பெண் பார்க்கும் போது வருகின்ற பெண் தன்னிடம் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள் . (சிலர் சொல்லுகிறார்கள் -எஸ்கேப்பு ).

ஒரு சகோதரன் சகோதரி மீது அதிகாரம் செலுத்தினால் அது அந்த சகோதரி மீது கொண்ட அக்கறையால்தான்.

கணவன்

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் இந்த பிரச்சினையின் வேர் இங்கே தான் இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.ஆனால் நன்கு புரிந்து கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுபவர்களிடம் எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லை. மேலும் திருமணமான புதிதில் இருக்கும் அந்த ஆணாதிக்க பிரச்னை நாளாக நாளாக வீரியம் குறையும் என்பது என் நம்பிக்கை.

கணவன் மனைவி சண்டையில் விட்டு கொடுப்பவரே புத்திசாலி ஆகிறார்.இப்படி விட்டு கொடுத்து போகும் போது ஆணாதிக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவர்கள் சண்டையில் விட்டு கொடுப்பவர் புத்திசாலி ஆகிறார் விட்டு கொடுக்காதவர் முட்டாளாகி போகிறார். நான் பலதடவை தங்க மணியிடம் சண்டை வரும்போது டென்சனாகி,கோவத்தின் உச்சிக்கு சென்று,கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் இதற்குமேல் பொறுத்து கொள்ள கூடாது இதற்க்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பல தடவை அடங்கி போய் இருக்கிறேன்.இப்போது எனக்கு புத்தி சாலி ஆகிவிட்டோம் என்ற நினைப்பு! அதேபோல பல தடவை தங்க மணியும் புத்திசாலி ஆகி இருக்கு! அப்போதெல்லாம் நான் முட்டாளாகி இருக்கிறேன்.

பெரும்பாலும் ஆணாதிக்க பிரச்சனையில் விவாதிப்போர் குடித்து விட்டு மனைவியை அடிப்பவர்களை பற்றியே அதிகம் பேசுகிறார்கள், மனைவி மட்டும் தான் அடி வாங்குகிறார்களா? புருஷன் மப்புல இருக்கான் இப்போ அடிச்சா ஒன்னும் தெரியாது அப்படின்னு மப்புல வைச்சு மொக்குற தங்க மணிகளும் உண்டு !

காலைல முழிச்சு முதுக வலிக்குது நேத்து என்னை அடிச்சியான்னு அப்பாவியா கேக்கும் ரங்க மணிகள் எவ்ளோ பேர் ? (சொந்த அனுபவம் ஏதும் இல்ல)

நான் என் புருசன தெய்வமா மதிக்கிறேன்,அவர் மேல உசிரையே வைச்சு இருக்கேன் அதனால நான் விட்டு கொடுத்து அவர முட்டாளாக்க விரும்பல அப்படின்னும், என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாமே அவ இல்லாட்டி நான் இல்ல அதனால நான் விட்டு கொடுத்து என் பொண்டாட்டிய முட்டாளாக்க விரும்பலன்னும் சொல்லி கமென்ட் போட வேணாம்னு என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளை அன்போடும்,பாசத்தோடும் பணிவோடும் கேட்டு கொள்கிறேன்.


மகன்

எந்த பெண்ணும் தன் மகனை இவன் ஆணாதிக்க கர்வம் பிடிச்சவன் என்று எப்போதும் சொல்ல போவது இல்லை அதனால் இதை பற்றி ஒன்றும் சொல்ல தேவை இல்லை.

பொதுவானவை

தகப்பன்,சகோதரன்,கணவன்,மகன் இவர்களை தவிர வேறு யாரேனும் ஒரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்திவிட முடியுமா? அப்படி நடந்தால் அதை பார்த்து கொண்டு இவர்கள் சும்மா இருந்து விடுவார்களா?

பணிக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஆணாதிக்க பிரச்னை இருப்பதாக சொல்ல படுகிறது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் இருக்கலாம் இந்த பிரச்சனையை பெண்கள் தைரியத்துடனும்,லாவகத்துடனும் எதிர் கொள்ள வேண்டும் . ஒருவன் தான் பதவியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தினால் அவன் நிஜத்தில் ஒரு கோழை யாகத்தான் இருப்பான்!

மேலும்,

எங்கள் நாட்டு பெண்கள் கலாச்சாரத்திலும்,கண்ணியத்திலும்,பண்பாட்டிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இங்கே எல்லோருக்குமே உண்டு.அதன் பொருட்டு சில நவ நாகரிக
நங்கைகளின் உடை ,மற்றும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் போது அதை
ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என திரித்து கூறப்படுவதாக தோன்றுகிறது.



நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்! பெண்களாக பார்க்கவில்லை!



பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை!

தன் உறவுகள் அல்லாது வேறு இடங்களில் ஒரு பெண் மீது யாராவது ஆதிக்கம் செலுத்த முற்பட்டால்? அவர் அதை தன் உறவுகளில் துணை கொண்டோ ? அல்லது தனித்தோ ?வைர நெஞ்சுடனும்,உறுதி கொண்ட உள்ளத்துடனும் எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆணாதிக்கம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்.


------------------------------------------------------------------------------------

மீள் பதிவு



>