''என் அப்பா வெளிநாட்டில இருக்காரு''

என் அப்பா வெளி நாட்டில இருந்தது இல்ல !
பாம்பே ல இருந்தார் ஆனா அது வெளி நாட்டில
இருந்தது போல தான். ஒரு தகப்பன் வெளிநாட்டில
இருக்கும் போது அவங்க வீட்டில என்ன என்ன
பிரச்சனைகள் வரும் அப்படிங்குறத என்னால
ஓரளவு விளக்க முடியும்.

எங்க ஊரு பக்கம் வெளி நாட்டில வேலை செய்றவங்க அதிகம்.

சென்னை விமான நிலையம்

ஒரு நண்பர் வெளிநாட்டில இருந்து வர்றதால
அழைக்க போய் இருந்தேன். விமானம் தாமதம்,
அதுனால சும்மா அப்படியே ஒரு ரவுண்டு சுத்தி
பார்க்கலாம்னு போனப்போ நான் கண்ட காட்சி!

ஒருத்தர் வெளிநாடு போறார் அவர வழி அனுப்ப
அவங்க அம்மா,அப்பா,மனைவி, பத்து வயசு இருக்கும்
ஒரு மகன், ஏழு வயசு இருக்கும்ஒரு மகள்.

அவர் மனைவி கண்ணெல்லாம் கலங்கி நிக்குறாங்க
ஏக்கமான பார்வையோட அவங்க புள்ளைங்க அவங்க
அம்மாதான்பேசுறாங்க! தம்பி! ஒடம்ப நல்லா
கவனிச்சுக்கணும் நேரத்துக்கு சாப்பிடனும், இங்க
வீட்டுலையே நேரத்துக்கு சாப்பிட மாட்ட அங்க என்ன
பண்ண போறியோ? அப்படி சொன்னதும் அவங்க
மனைவி லேசா தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாங்க!
அம்மா அழுவுறதபார்த்த புள்ளைங்களும் அழ ஆரம்பிக்க
அவர் அப்பா, சரி கிளம்புற நேரத்துல அழ கூடாது
அப்படின்னு லேசா அதட்டுறார்.

வெளிநாடு போற அவர பார்க்குறேன் மனுஷன் அப்படியே
நொந்துபோய் நிக்குறார் பாவமா இருக்கு அவர பார்க்க !
அவங்க அம்மா சொல்லுறதுக்கு தலைய ஆட்டுறார்
புள்ளைங்கள பார்த்து நல்லா படிக்கணும் அம்மா பேச்ச
கேட்டு நடக்கணும் அப்படிங்குறார்.

பேசிகிட்டு இருக்கும் போதே அவர்கூட கிளம்புறவங்க
வந்துட்டாங்க வாங்கண்ணே நேரமாச்சு உள்ள போக
வேண்டியதுதான் அப்படின்னு
சொல்ல! மனசே இல்லாம கிளம்பி போறார்.
அவர் மனைவி அவர்கிட்ட போய் என்னமோ
சொல்லுறாங்க அவரும் தலைய ஆட்டுறார்
பிரியா விடை பெற்று கிளம்பி போறார்.

இத பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா ?
கூழு,கஞ்சி, குடும்பத்த ஓட்டினாலும் இப்படி பிரிய கூடாது
என்ன வாழ்க்கை இது ? குடும்பத்த பிரிஞ்சு வாழ்றது
ஒரு வாழ்க்கையா ?அப்படிதான் தோணிச்சு!

நான் நெனைச்சது சரிதானா ?

எங்க ஊரு பக்கம் வெளிநாட்டில வேலை செய்றவங்க
அதிகம்னு சொன்னேன்ல? அவங்க நிலைல இருந்து
யோசிப்போம். இப்போ நான் என்னையே எடுத்துக்கிறேன்
நான் குடும்பத்தோடதான் இருக்கணும் வெளிநாடு
போக கூடாதுஅப்படிங்குற கொள்கையோட இருக்குறேன்.

இப்போ என் சொந்தகாரங்க,என் ஊர்காரங்க,
இவங்கள்ல என்னைபோலவே இருக்குற இவங்க வெளிநாடு
போய் நல்லாசம்பாதிச்சு நல்ல வீடு கட்டி நல்ல வசதியா
ஆயிடுறாங்க.இப்போ எனக்கும் தோணுது
வெளிநாடு போகனும்னுஆனா நான் சமாதான
படுத்திகிறேன் குடும்பத்தோடவாழ்றதுதான்
வாழ்க்கை அப்படின்னு என் மனைவியையும்
சமாதான படுத்துறேன். கொஞ்ச நாள்ல குழந்தை
பிறக்குதுஇப்போ எங்களுக்கு என்ன தோணும் மத்த
புள்ளைங்க போலவேஎங்க புள்ளையையும் நல்ல
வசதியா வளர்க்கணும் அப்படின்னு.

எங்க ஊர் மாதிரி ஒரு சின்ன நகரத்துல மாசம்
ஒரு பத்தாயிரம்ரூபாய் சம்பாதிக்கிறதே
பெரிய விஷயம்! எங்க பிள்ளை அடுத்தவங்கல
பார்த்து ஏங்கி போய்ட்டா? இப்போ நான் தானாவே
வெளிநாடு கிளம்பிடுவேன்.

இப்போ வெளிநாட்டில வேலை செய்கிற எல்லா
ஆண்களுமே தன் மனைவிகுழந்தைகளுக்காக
தனது எல்லா சந்தோசங்களையும் தியாகம்
செய்ஞ்சவங்கதான்அந்த ஆண்கள வீட்டுல
இருக்குற மனைவி மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும்
அவங்க மனைவி மக்களை நினைக்காத நாளே இருக்காது.

அதும் கல்யாணம் ஆனா புதுசுல பிரியுறாங்க
பாருங்க அவங்க நிலைமை இன்னும் சோகம் .
நான் என் நண்பர்கள் சிலரை பார்த்து இருக்கேன்
அவங்க தங்கள் குழந்தைகளிடம்
''மழலை இன்பத்தை'' அனுபவித்ததே கிடையாது!

குழந்தை பிறந்து இரண்டு வருஷம் கழித்து பார்க்கும்
தந்தைகளும் உண்டு ஒரு வயசு, இரண்டு வயசுல
பிள்ளைங்கள பிரிஞ்சு நாலு வருஷம் கழித்து
பார்க்கிற தந்தைகளும் உண்டு.

வெளிநாட்டில் இருந்து வரும்போது

வெளிநாடு போயிட்டு வரும் நபருக்கு வீட்டில்
ராஜ மரியாதைதான் அவர் கேட்டதெல்லாம் கிடைக்கும்
இயல்பு நிலை திரும்ப சில நாள் ஆகும்.

இப்போ வீட்டில் உள்ளவங்க இத கவனிங்க

அப்படி இயல்பு நிலை திரும்பும்போது கணவரின்
கை இருப்பும் குறைய ஆரம்பிக்கும்.கை இருப்பு
குறைவதால் மரியாதை குறைகிறது
என்ற எண்ணம் அவருக்கு வராமல் மனைவி
கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
இப்படி மனைவி மக்களுக்காக எல்லா
இன்பங்களையும் தொலைத்து வாழும் கணவனை
தெய்வமாக போற்ற வேண்டும்.

கணவனை பிரிந்து (வாடும்) வாழும் மனைவி

வெளி நாடு செல்லும் கணவன் நிலை அப்படி இருக்க
கணவனை பிரிந்து இங்கே இருக்கும் மனைவியும்
பிள்ளைகளும் அனுபவிக்கும் சோகங்கள் ஒன்றும்
குறைந்தது அல்ல! தீபாவளி ,பொங்கல்,ரம்ஜான்
எதுவாகட்டும்எல்லோரும் குடும்பதலைவருடன்
கொண்டாடும் போதுதன் கணவர் இல்லாமல்
தந்தை இல்லாமல் அவர்களும் ஒரு
இருக்கமான நிலையிலேயே வாழ்கிறார்கள்.
அதோடு படிக்கும் பிள்ளைகளை ஒரு தாய்
தனியாக கவனிப்பது பெரிய கஷ்ட்டமான காரியம்.
தாய்க்கு, தாயாகவும்,தந்தைக்கு தந்தையாகவும்
வளர்க்க வேண்டும்.
மேலும் பல சொல்ல முடியாத துயரங்கள்
இப்படி கணவனை பிரிந்து குடும்பத்தை கவனிக்கும்
அவர்களைவணங்கியே ஆக வேண்டும்.

தகப்பனை பிரிந்து வாழும்

பிள்ளை


நான் இந்த பதிவினை எழுதிய நோக்கம் இதுதான்
நான் தகப்பனை பிரிந்து வாழ்ந்தவன். என் நிலையை
பாருங்கள்
எனக்கு சின்ன வயதில் ஒன்றும்
தோன்றவில்லை ஆனால் ஒரு பதி மூன்று வயதிற்கு
பின்னர் என் அப்பா ஊரில் இருந்து வரும்போது
மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.ஆனால்,
நாள் செல்ல செல்ல அவர் கண்டிப்பு எனக்கு
பிடிக்கவில்லை
. திடீரென்று வந்து கண்டிப்பதை
என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை
அவர் எப்படா கிளம்புவார் என நினைக்க தொடங்குவேன்.

கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஒரு மனிதன்
தன் பிள்ளைக்காகவும் குடும்பத்துகாகவும் தனியே
கஷ்ட்ட படுகிறார் ஆனால் அவர் மகன் அவர்
எப்போடா கிளம்புவார் என நினைக்கிறான்?
இங்கே நான் குற்றவாளிதான்.
என்னை போல ஒரு மகன் உருவாக கூடாது
என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம்.

தகப்பன் வெளி நாட்டில் இருக்கும் போது
பத்து வயதிற்கு மேற்பட்ட மகனை
மிக கவனமாக வளர்க்க வேண்டும். தகப்பன்
அருகில் இருப்பது போன்ற உணர்வோடு அவனை
வழி நடத்த வேண்டும். முன்பு என் காலத்தில்
மாதம் இருமுறை கடிதம் மட்டுமே தொடர்பு
ஆனால் இப்போது அப்படி அல்ல சிறிய விசயங்களை
கூட கணவரிடம் கேட்டு கொள்ளலாம் கணவர்
பிள்ளையை எப்படி வளர்க்க விரும்புகிறாரோ
அதன் படி தாய் செய்ய வேண்டும். கொஞ்சம்
கவனம் தவறினால் தகப்பனுக்கும் பிள்ளைக்கும்
இடையில் பெரிய இடை வெளி வந்து விடும் பிறகு
இருவருக்கும் நடுவில் தாயார் மாட்டிக்கொண்டு
கஷ்ட்டப்பட நேரிடும்.


--------------------------------------


>

பயங்கரவாதம் (முனிவரும், கொட்டும் தேளும்)

எல்லோருக்கும் தெரிஞ்ச கதை ஒன்னு

ஒரு ஊருல ஒரு முனிவரும் அவருக்கு சில
சீடர்களும் இருந்தாங்க.ஒரு வாட்டி அந்த
முனிவர் ஒரு குளத்துல தன்
சீடர்களோட
குளிச்சுகிட்டு இருந்தாராம்.அப்போ தண்ணில
ஒரு ''தேளு'' தத்தளிச்சிகிட்டு இருந்திச்சாம்
அத பார்த்த முனிவர் அந்த தேள கைல எடுத்து
கரைல விட்டாராம் கைல எடுக்கும் போது
தேளு கைல ''கொட்டிச்சாம்'' அத பொறுத்துகிட்டு
கரைல விட்டாராம்.கொஞ்ச நேரம் கழிச்சு
அந்த தேளு மறுபடியும் தண்ணிக்குள்ள வந்துச்சாம்
அந்த முனிவர் மீண்டும் அத புடிச்சு கரைல
விட்டாராம் அப்போதும் அந்த தேளு அவர் கைல
கொட்டிச்சாம் பொறுத்துகிட்டு கரைல விட்டாராம்.
இப்படியே நெறைய தடவை ஆச்சு.

இத பார்த்த அவரது சீடர்கள் கேக்குறாங்க ஏன் ?
அந்த தேள்தான் கொட்டுதே அத கொன்னுட்டா
என்ன? அதுக்கு அந்த முனிவர் சொன்னாராம்
''கொட்டுறது தேளோட குணம் அத காப்பாத்துறது
என்னோட குணம்''
அப்படின்னு உடனே அவரது
சீடர்கள் ஆகா!ஓஹோன்னு! புகழ்ந்தாங்கலாம்
அந்த முனிவரை!

சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா?


இப்படித்தான் ஆச்சு நம்ம நிலைமை! நம்ம நாட்டில
''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!

எல்லாம் நம்ம தலை விதி!!

''ஊடு பூந்து அடிச்சுட்டான்'' பாகிஸ்தான் காரன்
தீவிரவாதிகள எங்க கிட்ட ஒப்படைங்கன்னு
பாகிஸ்தான் கிட்ட கெஞ்சுது நம்ம அரசு!


என்னமோ....
''புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''


போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!

நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு!

பாகிஸ்தான் ஆக்கிரமிச்சு வைச்சு இருக்கிற காஸ்மீர்
பகுதிய மீட்கணும் அதுக்கு போர் ஒண்ணுதான் வழி!

போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??

( குமுற வைத்த அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு நன்றி)

>

அம்மாவையும்,பிள்ளையையும் பிரிக்கலாமா?

சமீபத்தில் சகோதரி ஆகாயநதி ஒரு பதிவு எழுதி
இருந்தார்.அதாவது அவருக்கு பேறுகால விடுமுறை
முடிகிறது.கைகுழந்தையை யாரிடம் விட்டு செல்வது?
அவருக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லை
வேலையும் முக்கியம் என்ன செய்வது?

இது அவருக்கு மட்டும் நேர்கிற தனிப்பட்ட பிரச்சனையாக
எடுத்து கொள்ள முடியாது. வேலைக்கு செல்கிற அனைத்து
பெண்களுக்கும் நேர்கிற பிரச்சனைதான்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு குறைந்த பட்சம்
மூன்று வயது வரையாவது தேவைப்படும். இந்த நிலையில்
என்ன செய்வது? இந்த சிக்கலுக்கு அரசு கண்டிப்பாய் பதில்
சொல்லி ஆக வேண்டும்!!

சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல
வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது பத்துக்கு
மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில்
குழந்தைகளை வைத்து கொள்ள ஒரு இடம்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு ஆயா!
எப்படி ? கேக்கவே நல்லா இருக்குல்ல!
தாய்மார்களும் குழந்தைகளை அடிக்கடி பார்த்து
கொள்ளலாம் வேலையும் நன்றாக நடக்கும் ..


சரி அது ஒரு கற்பனைதான் அந்த கற்பனையை
உண்மையாக்க முடியுமா?
உண்மையாக்க என்ன செய்யலாம்?அந்த கற்பனை
உண்மையாக அரசு சட்டம் பிறப்பிக்கவேண்டும்!
அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார்
நிறுவனங்களிலோ?பத்துக்கு மேற்பட்ட பெண்கள்
பணி புரிந்தால் அங்கே குழந்தை வைத்துக்கொள்ள
தனி இடமும் ஒரு ஆயாவும் இருக்க வேண்டும் என!


இது நடக்குமா? அரசினை இயக்குபவர்கள் யார் ?
அரசியல்வாதிகள், இன்னும் சொல்ல போனால்
கட்சிகாரர்கள் அவர்களுக்கு என்ன தேவை!
ஓட்டு!........................ஓட்டு!........................ஓட்டு!

இந்த ஓட்டு மட்டும்தான் அவர்கள் தேவை!
நமது கையில் இருக்கும் பெரிய ஆயுதமும் ஓட்டுதான்!

ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழ்
நாட்டில் எத்தனை ஓட்டுக்கள் ஆட்சியை நிர்ணயம் செய்கிறது
தெரியுமா ?

வெறும் முப்பது லட்சம் ஓட்டுகள்தான்

கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற மொத்த ஓட்டுக்கள்
கூட்டணி எல்லாம் சேர்த்து ஒரு கோடியே முப்பது லட்சம்
(கிட்டதட்ட)
அதிமுக பெற்ற ஓட்டுக்கள் ஒரு கோடி
(கிட்டதட்ட)

வெறும் முப்பது லட்சம் ஓட்டுக்கள் மட்டும்தான் இந்த
ஆட்சியை நிறுவி இருக்கிறது.

மேலும் சில கட்சிகளின் வாக்கு பலம்...

வேகமாக வளர்ந்து வருவதாக கருதப்படும் விஜய காந்தின்
தேமுதிக தனியே நின்று பெற்ற ஓட்டுக்கள் இருபத்தி எட்டு
லட்சம்.

மதிமுக இருநூற்று பதிமூன்று தனியே நின்று மொத்தம்
பெற்ற ஓட்டுக்கள் சுமார் பதி மூன்று லட்சம்.

பாட்டாளி மக்கள் கட்சி யும் கிட்டத்தட்ட இந்த நிலைதான்
சற்று கூடலாம்.

அதுபோல காங்கிரஸ் எனக்கு தெரிந்த வரை தனியே நின்றது
இல்லை.சமீப காலம் வரை. அப்படி தனியே நின்றாலும்
பதினைந்து லட்சம் ஓட்டுக்கள் பெற்றால் பெரிய விஷயம்

இதைவிட சொற்பஅளவில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து
கொண்டு அரசியல் நடத்துகின்றன கட்சிகள்.

சரி இதெல்லாம் எதற்கு?
தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருப்பவர்கள் சங்கம்
அமைத்துள்ளனர். அவர்கள் ஓட்டு முழு அளவில்
ஒரு கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
சரி தனியார் துறையில் தமிழகத்தில் எத்தனை
பேர் இருப்பார்கள்? எனக்கு சரியாக கணிக்க
தெரியவில்லை!குறைந்த பட்சம் ஒரு ஐந்து லட்சம் பேர்
இருப்பார்களா ?அப்படி இருந்தாலே போதும்
ஒவ்வொருவரும் நான்கு வாக்குகளுக்கு சமம்.
அவர்கள் குடும்பம் எல்லாம் சேர்த்து.

இந்த தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி
அமைப்பு ஏற்பட வேண்டும்! இப்படி அமைப்பை ஏற்படுத்தி
கொடி பிடித்து போராட்டம் நடத்த வேண்டியது இல்லை

இவர்களிடம் இருபத்து லட்சம் ஓட்டு இருக்கிறது இவர்கள்
வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள்
ஓட்டு அப்படியே அவர்களுக்கு தான் என்ற நிலையை உருவாக்க
வேண்டும். அப்படி நிலை ஏற்ப்பட்டால் போதும்!

அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்து விடுவார்கள்.

அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த கோரிக்கைகளை அரசு வேலையில் இருப்பவர்கள்
முன்னின்று வைத்தால் மிக நன்றாக இருக்கும் !

சரி இது வேலை செய்பவர்களை நிலையில் இருந்து யோசித்தது!

இப்போ நான் முதலமைச்சர் கனவில் இருக்கும் ஒரு கட்சி
தலைவர், சுமார் இருபது லட்சம் ஓட்டுகளை வைத்து இருக்கும்
ஒரு அமைப்பு! சில கோரிக்கைகளை வைக்கிறார்கள்,
அதாவது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும்
இடத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாவும்
இடமும் வேண்டும் என்ற கோரிக்கை உட்பட,

இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .

..................................
>

எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்

வருங்கால முதல்வர்ல நம்ம நண்பர் ''குடுகுடுப்பை''
தஞ்சை பற்றி பதிவு போட அழைப்பு விடுத்திருந்தார்.
இப்போ அங்க கொங்கு நாட்டு ''மகேசும்''நெல்லை
''நசரேயனும்'' கலக்கிக்கிட்டு இருக்காங்க அதன் பிறகு
என் தஞ்சை பதிவ போடலாம்னு இருக்கேன்.


நம்ம ஊரபத்தி நாமளே எழுதுறது சிறப்புதான்!
ஆனா எங்க தஞ்சைய பத்தி வேற யாரவது புகழ்ந்து
பேசினா ரொம்ப சந்தோசமா இருக்கும்.
நான் ''கோவைல'' மூணு வருஷம் இருந்து இருக்கேன்.
அதுனால கோவை பத்தி ஒரு பதிவு போடனும்னு
கொஞ்ச நாளா ஒரு ஆசை அதான் இந்த பதிவு!

நான் பிறந்தது ''அந்தமான்ல'' அங்க,எழு ,எட்டு
வயசுவரை இருந்து இருப்பேன் அதன் பிறகு
எங்க ஊருக்கு வந்தாச்சு.படிச்சது ,வளர்ந்தது
எல்லாம் எங்க ஊருதான்.இப்போ சென்னைல
குடும்பத்தோடசெட்டில் ஆயாச்சு.பதிமூணு வருஷம் ஆச்சு!
இடைல பன்னண்டாவது முடிச்சுட்டு நகை தொழில்
கத்துக்க கோயம்புத்தூர் போய்இருந்தேன்,அங்கேயே
ஒரு மூணு வருஷம் இருந்தேன்.எல்லோருக்கும் தன்
சொந்த ஊரு சொர்க்கம்தான் எனக்கும் அப்படித்தான்
ஆனா என் சொந்த ஊருக்கு நிகரா நான் நேசிச்ச ஊரு
கோயம்புத்தூரு.இப்போகூட பாருங்க குடும்பம்,
புள்ள குட்டியோட தான் சென்னைல இருக்கேன் ஆனா?
கோவை மேல உள்ள அந்த பாசமும், நேசமும்
சென்னை மேல துளியும் வரல? அப்படி என்னதான்
இருக்கு கோயம்புத்தூர்ல? சொல்லுறேன் கேளுங்க!


என் அப்பாதான் கோவைக்கு அழைச்சிகிட்டு போனார்
என் அப்பா பம்பாய் ல இருந்ததால அங்க அவருக்கு
தெரிஞ்சவங்ககோவைல இருந்தாங்க அவங்க
கிட்டதான் என்னை அழைச்சுகிட்டுபோனார்.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் ல
எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் க்கு போறோம்.
மழை வர்ற மாதிரி குளு.குளுன்னு இருக்கு, நானும்
அப்பாவும் அப்போதான் முதல் முறை அங்க போறது!
நாங்க போக வேண்டியது ''பெரிய கடை வீதி''கைல
விலாசம் இருக்கு.எந்த பஸ்ல போகனும்னு விசாரிக்கணும்.
எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கிட்ட விலாசம் விசாரிக்க
சின்ன எரிச்சல்!ஏன் அப்படின்னா ?அதுக்கு முன்னாடி சென்னைக்கு
அடிக்கடி போவேன் அப்போ யார்கிட்டயாவது விலாசம்
விசாரிச்சா என்னை பெரிய இவங்க மாதிரி அலட்சியமா
பதில் சொல்லுவாங்க செம கடுப்பா இருக்கும் .

இப்போ அங்க என் அப்பாதான் கேக்குறார் அதுக்கு ஒருத்தர்
அங்க போய் நில்லுங்க, உக்கடம் போற பஸ் வரும்
அதுல போங்க அப்படின்னு.விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!

பஸ்ல ஏறி உக்காந்தாச்சு கண்டக்டர் கிட்ட அப்பா
சொல்லுறார்நாங்க ஊருக்கு புதுசு பெரிய கடை வீதி
ஸ்டாப்ல எறக்கி விடுங்கஅப்படின்னு.
(எனக்கு கோவம் ஊருக்கு புதுசுன்னா யாராவது
மதிப்பாங்களா இதெல்லாம் போய் அவர் கிட்ட சொல்லிக்கிட்டு)
அதுக்கு அவர் சொல்லுறார் ...அப்படிங்களா!சரிங்க!
ஸ்டாப்வந்ததும் சொல்லுறேன் எறங்கிகுங்க
அப்படிங்குறார், அட ! எனக்கு இன்னும் ஆச்சர்யம்!
இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? வந்து எறங்கி சில நிமிசத்துலே
புது ஊர் அப்படிங்கிற ஒரு பயம் போய் ஒரு உற்சாகம்
வந்துடுச்சி.

இப்படித்தான் என் கோவை வாழ்க்கை ஆரம்பம்,
முதல்ல ஏறங்கினப்போ மழை வர்ற மாதிரி இருந்துசின்னு
சொன்னேன்ல! இல்லங்க, அங்க எப்போதும் அப்படிதான்
இருக்கும் சும்மா குளு குளுன்னு !


கோவை தண்ணிய பத்தி சொல்ல வேண்டியது இல்ல
சிறுவாணி தண்ணின்னா உலக அளவில் புகழ் பெற்றது
முக்கியமா நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.
புதுசா போறவங்களுக்கு என்ன மரியாதை!

அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!
நெறைய கத்துகிட்டேன் நான் அங்க இப்போகூட
நான் என்னை விட சின்னவங்கள கூட வாங்க,
போங்கன்னுதான் கூப்பிடுறேன்.

இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.

நான் அங்க இருக்கும் போது வடகோவை மேம்பாலம்
கட்டிக்கிட்டு இருந்தாங்க அத கட்டி முடிச்சோன பார்க்க
ஆசைஇன்னும் வாய்ப்பு கிடைக்கல.

அப்புறம் முக்கியமான விஷயம்!

எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் .

கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்
>

தெய்வம், இறைவன்

சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால
தெய்வம்,இறைவன் இதெல்லாம் பத்தி பெரியவங்க
சொன்னதுல எனக்கு புடிச்ச சிலத சொல்லுறேன்
கேளுங்க..........


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

(கவிஞர் வாலியின் பாபு திரைப்பட வரிகள்)

எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
(சுவாமி விவேகானந்தர்)



எனக்கு புடிச்ச குறள் ஒன்னு

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலிதரும்













>

மரணத்திற்கு பின்

வெளியில் செல்லும்போது சவ ஊர்வலத்தை கண்டால்
நினைத்துக்கொள்வேன், இந்த பயணம் நமக்கு ஒருநாள்
நிச்சயம். அதோடு, அந்த இறந்தவரின் தோற்றத்தை பார்ப்பேன்.
வயதானவராக இருந்தால் ஆறுதல் கொள்வேன்.வயது
குறைந்தவராக இருந்தால் அந்த ஊர்வலத்தில் யாராவது
அழுது கொண்டு வந்தால்,அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.


சரி!என் மரணம் எப்படி இருக்க வேண்டும்? (சும்மா ஒரு கற்பனை)

பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் சுற்றி நிற்க!போதும் இந்த
வாழ்க்கை என்று!ஒரு நிறைவுடனும்,விருப்பத்துடனும்
வெளியேற வேண்டும்.

ஓகே! செத்துப்போன பிறகு ஆன்மாவாக அலைவாங்கலாமே?
கொஞ்சம், ஆன்மாவாயிட்டா எப்படி இருப்போம் அப்படின்னு
ஆன்மாவா மாறி யோசிச்சு பார்ப்போமா? (ரொம்ப யோசிக்கிறேனோ)
ஆன்மாவா மாறியாச்சு இப்போ என்ன நினைக்கிறேன்? நம்ம
சந்ததியினரை நாம் கூடவே இருந்து கெடுதல் ஏதும் வராம
பார்த்துக்கணும்!

சில ஜோசிய காரங்க சொல்லுறாங்களே உங்க முன்னோர்களுக்கு
நீங்க செய்ய வேண்டிய கடமைகள செய்யல அதான் உங்க
குடும்பம் கஷ்டபடுது அப்படின்னு உண்மையா?

சரி நாம ஆன்மாவா இருக்கும்போது நம்ம சந்ததி
நமக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்யாட்டி
அவங்கள கஷ்டபடுத்துவோமோ?
ச்சே! ச்சே! அப்படியெல்லாம் பண்ண கூடாது
வேணும்னா சக ஆன்மா யாராவது இருந்தா,
பாருங்க சார்! நான் எப்போதும் என் பிள்ளைங்க
பேரன்,பேத்திகள நெனைச்சுகிட்டே இருக்கேன்
ஆனா?அவங்க யாரும் என்ன கண்டுக்கல
அப்படின்னு சொல்லி வருத்த பட்டுக்கலாம்.

சரி! நம்ம சந்ததி நம்மள மறக்காம செய்ய வேண்டிய
கடமைகள தொடர்ந்து செய்ஞ்சுகிட்டே இருந்தா?

அப்போ கண்டிப்பா ஒரு ''ஆக்டிவான'' ஆன்மாவாக
இருப்போம்னு தோணுது! சரி போதும் இதுக்கு மேல
யோசிக்க பயமா இருக்கு!

சரி! இயல்பு நிலைக்கு திரும்பிடலாம்!
சரி! இதுக்கெல்லாம் நமக்குள்ள 'பகுத்தறிவு' அப்படின்னு
இருக்குல்ல (அப்படியா) அதுகிட்ட கேட்டு பார்க்கலாம்!

அதுகிட்ட கேட்டா?

'' டவர் கிடைக்காத மொபைல் போன் போல
த ஸப்ஸ்கிரைபர் நாட் ரீச்சபிள்'' அப்படிங்குது!

என்ன பண்ணுறது? பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு இதும் அப்படித்தான்
அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்!

இப்படி யோசிச்சா?
ஒருவேள நம்ம முன்னோர்கள்ஆன்மாவா இருந்து நம்மள
கவனிச்சுகிட்டு இருப்பாங்களோ ?

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!...............
....................
>

''மாற்றாந்தாய்''

நமது உறவு முறைகளில் மிகவும் மதிக்க பட
வேண்டிய,உயர்வாக போற்றப்பட வேண்டிய
உறவு முறை எது என கேட்டால் மாற்றாந்தாய்
அதாவது தந்தையின் இரண்டாவது மனைவி
என்று தான் சொல்லுவேன்.

சரி! எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இரண்டாம்
தாரமாக வாழ்க்கைபடுகிறாள்.சிற்சில இடங்களை
தவிர பெரும்பாலும் வறுமையும், ஏழ்மையும்
தான் அவ்வாறு வாழ்க்கைப்பட வைக்கிறது.


ஒருவனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து
ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?
அவளும் எல்லா பெண்களை போல கனவு கண்டுதானே
வளர்ந்திருப்பாள்? ஆனால் தன் பெற்றோரின் வறுமைக்காக
ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது
அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?

தனது ஆசைகளையும்,கனவுகளையும் தியாகம் செய்துவிட்டு
ஏற்கனவே திருமணமாகி எல்லா இன்பங்களையும் அடைந்து
அனுபவித்த ஒருவனை திருமணம் செய்ய எந்த அளவு தன்
மனதை தயார் செய்ய வேண்டும் ?

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ
திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.

ஆனால்?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்?
வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.

அதுவும் முதல் தாரத்தின் பிள்ளைகளை கவனிக்கும்
போது சுற்றுபுறம் அவளை மிகவும் கொடுமைபடுத்துகிறது!


'''ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றதாய் போல வருமா?'''

இது போன்ற கேள்விகள் அவளை மிகவும் பாதிப்படைய
செய்கிறது!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இப்படி
இரண்டாம் தாரமாக வருபவள் ஏற்கனவே மிகுந்த
மன உளைச்சலோடும்,நிறைய ஏமாற்றங்களோடும்
இருப்பாள்.அதனால் அவளின் கோபங்களையும்,
வெறுப்புகளையும் மற்றவர்கள்தான் பொறுத்து
கொள்ள வேண்டும்.(இந்த வாழ்க்கையில் அவள் நிலை
பெரும் வரை)

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது கணவரின்
முதல் மனைவியின் பிள்ளைக்கு ஒரு ''கிட்னியையே''
தானமாக கொடுத்து இருக்கின்றார்.

கிட்னியை பெற்றுக்கொண்ட அந்த நபருக்கு
இரண்டு உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள்
கிட்னி கொடுக்க தயாராக இல்லை.

ஆனால் ஒரு மாற்றாந்தாய் கிட்னி வழங்கி இருக்கிறார்.
அவரும் திருமணமான புதிதில் கணவர் வீட்டாரால்
கடும் இன்னலுக்கு ஆளாக்க பட்டவர்தான்.

இது போன்ற மாற்றாந்தாய் பெண்களை அவரின்
சுற்றுபுறம் போற்றவேண்டும்,அவளுக்கு அமைதியை
கொடுக்காவிட்டாலும்,அவள் நிம்மதியை கெடுக்காமல்
இருக்கவேண்டும்.

''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''


..............

>

''அட்சய நந்தினிக்கு பிறந்த நாள்''


21-11-2008, வெள்ளிக்கிழமை எங்க ''அச்சு'' க்கு முதல்
பிறந்த நாள் எல்லோரும் வந்து வாழ்த்துங்க!
>

எப்படி இருக்கு இந்த போட்டோ?

நிக்கிறது தங்கமணி! நடுவில உக்காந்து இருக்குறது!
நான்தான் (ஹி... ஹி) அடுத்து எங்க பொண்ணு!
அமிர்தவர்ஷிணி! எப்ப்ப்புடி ....?



என் சின்ன வயசு போட்டோவும்,சிங்க மணி போட்டோவும்
கிடைச்சது அதான் எங்க பொண்ணுகூட சேர்ந்து நாங்களும்
சின்ன புள்ளயா!
>

நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு
அந்த பழக்கத்தை விட்டதையும் பத்தி
சொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம்
சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது
கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு
அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு
சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா
முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர்
வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட்
பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய
மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க
ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும்
இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்
''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம்
என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட்
புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும்
பொருளாதார தேவையும் நம்மள சென்னைல
கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம
இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே,
தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு
முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே
ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட்
பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு
பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு!
தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம
யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!



ஒருநாள் சிங்க மணி வந்து ஏங்க ''வாழ்வே மாயம்''
படம் பார்த்தீங்களா? அதுல சிகரெட் புடிச்சு கமலுக்கு
கடைசில என்னாகுது பார்தீங்களா?(திருத்துராங்கலாம்)
இப்போ கமலுக்கு என்னாச்சி? நல்லாதானே இருக்காரு
அப்படிண்ணு நான் சொன்னதும் கடுப்பாயி போச்சு!

சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டி போட்ட பூனையாட்டம் ஆஸ்பத்திரிய
சுத்தி சுத்தி வரேன் (குட்டிபோட்ட பூனை உண்மை தானே)
எல்லாம் சொல்லுவாங்க குழந்தை நம்ம முகத்த
நல்லா பார்க்க ரெண்டு,மூணு நாள் ஆகும் அப்படின்னு
ஆனா என் பொண்ணு மறுநாளே என் முகத்த
நல்லா பார்த்து நல்லா ஒரு சிரிப்பு சிரிச்சது
பாருங்க! என் வாழ்நாள்ல கண்ட மிக சிறந்த
காட்சி அதுதான் அப்படியே சொக்கி போயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய
அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட
தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான
மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே
நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம்
உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது
எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான்
சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும்
எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு
பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு
அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு
கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா
பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம்
பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!


பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !


சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!
அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....


ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!


தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால
நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல!
சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட்
புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட
பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு
சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி
கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி
செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு
சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன்
அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்
''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது
சிகரெட் புடிக்கணும்
அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள
புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத
எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.



''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.


முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு
இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு
சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும்
பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி
குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான்
இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள
இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை
என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட்
புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள
இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம்
போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம்
விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா
ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம்
அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது
மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே
அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு
இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான்
இருக்கு.


ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு
வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச
சாதனையா நினைக்கிறேன்.
இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல
அது நிச்சயம்!


(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள
நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட
முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும்
கண்டிப்பா முடியும் )
>

''வீட்ட விட்டு ஓடிபோய்''

நான் எட்டாவது,ஒன்பதாவது படிக்கும் போது ஒழுங்கா
பள்ளிக்கூடம் போக மாட்டேன்.நம்ம குடும்பம் வந்து
பரம்பரையா நகை தொழில் செய்யிற குடும்பம் அதுல
வந்து பசங்கள அதிகமா படிக்க வைக்க மாட்டங்க.(அப்போ)
ஒரு எட்டாவது,ஒன்பதாவது முடிச்சோன எதாவது
ஒரு நகை பட்டறைல சேர்த்து விட்டுடுவாங்க
அதேபோல அந்த வயசு பசங்களுக்கும் வேலைல
ஒரு ஆர்வம் வந்துடும் பள்ளிக்கூடம் போக மனசு
வராது. எனக்கும் அப்படித்தான் வேலை கத்துக்க
ரொம்ப ஆர்வம். என் வயசு நண்பர்கள் எல்லாம்
மாயவரத்துல ஒருத்தன்,கும்பகோணத்துல ஒருத்தன்
ஒரத்த நாட்டுல ஒருத்தன்னு வேல கத்துக்க
போய்ட்டானுங்க தீபாவளி,பொங்கல்னா வருவாங்க
அவனுங்களே செம்பு , வெள்ளி இதுல எல்லாம் ஏதாவது
மோதிரம் போல நகை செய்ஞ்சு காட்டுவாங்க எனக்கு
வேலை கத்துக்க போய் ஆகனும்னு வீட்டுல ஒரே
பிரச்சனை பண்ணுறேன்.


அப்போ என் அப்பா பம்பாய் ல இருந்தார் அவரும்
நகை வேலைதான். அவர் கண்டிப்பா சொல்லிட்டார்
நகை தொழில் எல்லாம் வேணாம் படிச்சுதான்
ஆகணும் அப்படின்னு.எனக்கு படிக்க புடிக்கல!


அப்பாவும் ஊர்ல இல்ல அம்மா பேச்ச கேக்காம
பள்ளிக்கூடம் போகாம ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.
அப்போ எங்க வாத்தியார் சீனிவாசன் இருந்தார்.
அவர் வந்து நான் சும்மா சுத்திகிட்டு இருக்குறத
கேள்விப்பட்டு ரெண்டு மூணு பசங்கள அனுப்பி
கூட்டிகிட்டு வர சொல்லி அனுப்பினார்.நான்
போகல.வந்த பசங்க சொல்லுறாங்க டேய்!இப்போ
நீ வராட்டி சாரே இங்க வருவார் அப்படின்னு
பெரிய இவனுங்க மாதிரி சொல்லுறாங்க!

என் அம்மா வந்து தம்பிங்களா!அவன புடிச்சு
துக்கிக்கிட்டு போங்க அப்போதான் வருவான்
அப்படின்னு சொல்ல எனக்கு என் அம்மா மேல
செம கோவம் ! அந்த தடிமாட்டு கம்னாட்டிங்களும்!
என்னைய வலுகட்டாயமா கூட்டிகிட்டு போய்ட்டாங்க.


சீனிவாசன் சார்! சொல்லுறார் ஏன்டா!உன்னைய
கேக்க ஆளு இல்லன்னு ஊர் சுத்துரியா?
மரியாதயா ஸ்கூல் வராட்டி தொலைசுருவேன்
ராஸ்கல்! முதுகுல நாலு சாத்து சாத்தினார் !
நான் சொல்லுரவரைக்கும் கீழ எறங்க கூடாது
அப்படின்னு பெஞ்ச் மேல நிக்க சொல்லிட்டார் !
அவர் வெளில போகும் போது நான் கீழ எறங்காம
இருக்க ரெண்டு பசங்க காவல் வேற!


பெரிய அவமானம் எனக்கு சில பசங்க சிரிக்கிறாங்க!
என் அம்மா மேலயும் கோவம்!முடிவு பண்ணிட்டேன்
இனிமே வீட்டுக்கு போக கூடாது.எங்கயாவது
ஓடி போய்டனும்னு.

அந்த பெஞ்ச் மேல நின்னுகிட்டே கற்பனை பண்ணுறேன்
எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
வந்து எறங்கனும் அப்படின்னு .


ஸ்கூல் முடியிற நேரம் சார் வந்து நெறைய
அறிவுரை சொல்லுறார் நாளைக்கு காலைல
என்ன வந்து பார்க்கனும்னுபாசமா சொல்லுறார் .
அந்த ஒரு நிமிஷம் எனக்கு அவர ரொம்பபுடிச்சது .

ஆனாலும் ஓடிபோற முடிவுல எந்த மாற்றமும் இல்ல
அன்னிகின்னு பார்த்து என்கிட்டே மூணு ரூவாயோ?
நாலு ரூவாயோ? இருந்துச்சி ஒரு போஸ்ட் கார்ட்
வாங்கினேன்.''நான் வீட்ட விட்டு போறேன் என்ன
தேட வேண்டாம் '' அப்படின்னு எழுதி போஸ்ட்
பண்ணிட்டேன்.

பஸ் டாண்ட் போய் மன்னார் குடி போற பஸ் ல ஏறினேன்
காச எடுத்து எண்ணி பார்க்குறேன்,ஒருவேள திரும்பி
வர்ற மாதிரி இருந்தா ? பார்த்தா காசு பத்தல என்ன
செய்கிறது? பஸ் ஸ்டார்ட் ஆச்சு பயம் வந்துடுச்சி
டக்குன்னு எறங்கி வீட்டுக்கே போயிட்டேன்!


மறுநாள் காலைல அந்த பசங்க மறுபடியும் வந்துட்டாங்க
ஸ்கூல் போயிட்டேன்.இப்போ எனக்கு என்ன பயம்னா
நான் போட்ட அந்த லெட்டர்! அது வீட்டுக்கு போறதுக்கு
முன்னாடி எப்படியாவது போஸ்ட் மேன் கிட்ட வாங்கிடனும் !

மத்தியானம் பெல் அடிச்சதும் வேக, வேகமா போய்
வீட்டுகிட்டநின்னுகிட்டேன் .பார்த்தா போஸ்ட் மேன்
வரவே இல்ல .

சாயங்காலம் வீட்டுக்கு போறேன் பயந்துகிட்டே!
எதிர் வீடு,பக்கத்து வீடு யாரும் பாக்கி இல்ல
எல்லார்கிட்டயும் லெட்டர காட்டி சிரிச்சுகிட்டு
எங்கம்மா! எனக்கு எப்படி இருக்கும்?எப்படி
இருந்துசின்னு சொல்லவே வரல!

வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாருங்கன்னு
எல்லாரும் ஒரே கிண்டல் ஐயோ! ஐயோ!
>

காந்திஜி செய்தது சரிதானா ?



ரொம்ப வருசமா மனசுக்குள்ள ஒரு கேள்வி
கெடந்து அரிச்சுகிட்டே இருக்குது .

நாம வெளியில போகும்போது,அதாவது
ஒரு விசேசத்துக்கோ,வெளி ஊருக்கோ
போகும் போது எப்படி போவோம்?
என்னதான் நம்மகிட்ட போட்டுக்க
நல்ல துணிமணி இல்லாட்டியும் இருக்குறதுலேயே
நல்ல துணியா பார்த்து நல்லா துவைச்சு,
முடிஞ்சா அயன்பண்ணிதான் போட்டுக்கிட்டு
போவோம் .அதுல ஒரு தன் மானமும்,
சுய கவுரவமும் இருக்கு இல்லையா?

ஆனா!
நம்ம தேச பிதா!மஹாத்மா காந்தி!
நம்ம நாட்டில போட்டுக்க கூட துணி இல்லாம
மக்கள் சில இடங்கள்ல இருந்ததால,இனிமேல
நானும் சட்டை போட்டுக்க மாட்டேன், எல்லா
மக்களுக்கும் போட்டுக்கொள்ள உடை கிடைக்கிர
வரையில் இப்படித்தான் இருப்பேன்னு மேல் சட்டையே
போட்டுக்கல.அதுல நம்ம நாட்டு மக்கள் மேல அவர்
வைச்சு இருக்குற அன்பும்,மனிதாபிமானமும்
தெரிஞ்சது.

சரி!
அதேபோல சட்டையே போட்டுக்காம
உலகம் முழுவதும் சுத்தியும் வந்தார்.
அப்போ அதை பார்த்த வெளிநாட்டுகாரங்க
நம்ம இந்திய மக்களை பத்தி என்ன நினைச்சு
இருப்பாங்க? இந்திய மக்கள் எல்லோரும்
போட்டுக்க கூட துணி இல்லாத பஞ்ச,பரதேசிங்க
அப்படின்னு நினைச்சு இருக்க மாட்டாங்களா ?

அதுனால! இந்திய மக்களோட தன்மானமும்
சுய கவுரவமும் பாதிக்க பட்டு இருக்காதா ?


நான் கேக்குறது, சரியா? தப்பா?
>

இட்லியும்,கறிகுழம்பும்


காலைல அஞ்சுமணிக்கு எந்திரிச்சு,
வெது வெதுன்னு சுடுதண்ணி போட்டு,
நல்லா எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டு,
காலைலேயே சுடச்சுட இட்லி அதுக்கு
தொட்டுக்க கறி குழம்போட சாப்டுட்டு,
சந்தோசமா கொண்டாடுங்க தீபாவளிய!!!
>

சீமான், அமீர் கைது!


இரண்டு இயக்குனர்கள் இன்று ''நாயகர்'' களாக ஆனார்கள்
>

என் டெக்ஸ்டாப்ல

இப்போ இருக்குறது இவங்கதான் என் ரெண்டாவது பொண்ணு
அட்சய நந்தினி


முன்னாடி இருந்தது இந்தம்மாதான் முதல் பொண்ணு
அமிர்த வர்ஷிணி
ரெண்டுபேரும் சேர்ந்த மாதிரி ஒரு போட்டோ புடிச்சு வைக்கணும்

என்னை அழைத்த அமுதா அவங்களுக்கு நன்றி!!


நான் அழைக்கிறது!


சிம்பா
குடுகுடுப்பை
>

ஈழத் தமிழருக்கான ஆதரவு தமிழ்நாட்டில் மேலும் பலமடைய ....

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?
அங்கே நடைபெறும் போராட்டத்தில், தமிழ்
போராளிகளின் நோக்கம் என்ன? தமிழ் போராளிகள்
உருவானது ஏன்? இதையெல்லாம் மறுபடியும்
தமிழ் மக்களுக்கு (தமிழ் நாட்டில் உள்ள)
உணர்த்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

இங்கே தமிழகத்தில் ஒரு தலைமுறை இடைவெளி
ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்
அவருக்கு ஒரு முப்பத்து இரண்டு வயது இருக்கும்.
அப்போது இலங்கை போராளிகள்,இலங்கை தமிழர்கள்
பற்றி பேச முற்படும் போது அவர் இலங்கை போராளிகளை
வெறுப்பதாக கூறினார்! அதற்கு அவர் கூறிய காரணங்கள்
மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது .

அப்போது நான் அவரிடம் கேட்டேன் இலங்கை போராளிகள்
உருவாவதற்கு முன்னர் சிங்கள ராணுவத்தினர் தமிழ்
மக்கள் மீது நடத்திய வன்முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
என்று ? என்ன கொடுமை! அவருக்கு எதுவுமே தெரியவில்லை!
ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனை கட்டி போட்டு
அவன் கண்முன்னால் அவனது தாயை , சிங்கள நாய்கள்
கற்பழித்த கதை உங்களுக்கு தெரியுமா என கேட்டேன்?
...........தெரியவில்லை!

ஒரு கர்ப்பிணி தமிழ் தாயின் வயிற்றை கிழித்து!
வயிற்றில் உள்ள குழந்தையை எடுத்து வெட்டி கொன்ற
கதை தெரியுமா? என கேட்டேன்?அதுவும் அவருக்கு
..............தெரியவில்லை! ஆனால்! இதையெல்லாம் கேட்டு
அவர் கொதித்து போய்விட்டார்!
அப்போது நான் சொன்னேன்,சிங்கள ராணுவத்தினர்
செய்த அட்டூழியங்களை நான் உங்களுக்கு முழுவதும்
சொல்லவில்லை நான் முழுவதும் சொன்னால் நீங்கள்
நிம்மதி இழந்து விடுவீர்கள் என்று!


தற்போது முப்பது வயதிற்கு உள்பட்ட தமிழர்களுக்கு
இலங்கை தமிழ் போராளிகள் உருவான கதையை
சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

இப்போது தமிழகத்தில் உள்ள மக்கள் நினைத்து
கொண்டிருப்பது என்ன?'' இலங்கை தமிழர்கள்
தனி நாடு கேட்டு போராடுகிறார்கள்'' அவ்வளவுதான்

ஆனால் !!

ஏன்? எதற்கு?இலங்கை தமிழர்களுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டது ? என்ற எந்த விவரமும் தெரியாத
மக்களும் இங்கே நெறைய பேர் இருப்பதாக
தோன்றுகிறது.

தற்போது தமிழ் நாட்டில் திமுக,மதிமுக,பாமக,விடுதலை
சிறுத்தைகள்,மற்றும் பல அமைப்புகள் எல்லாம் தீவிர
இலங்கை தமிழர்கள் ஆதரவாளர்கள் தான்.
அந்த அமைப்புகள் எல்லாம் தமிழீழ போராளிகள்
உருவான காரணங்களை மேடைதோறும் முழங்க வேண்டும்!

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் போராளிகள் உருவான
காரணங்களை,முழுவதும் தெரிந்தவர்கள் வலையேற்றுங்கள் .
>

''இந்த குதிரைக்குத்தான் எவ்ளோ பலம்''


''ஒரு சிங்கத்தையே தூக்கிகிட்டு போகுது பாருங்க இந்த குதிரை''
(சிங்க மணி (தங்கமணி) வந்து ஆறு வருஷம் ஆச்சு
21/10/2008 இன்னியோட )
>

தூண்டில் மீன்

தூண்டில் போட்டு மீன் புடிக்கிறது ரொம்ப சுவாரஸ்யமான
விஷயம்.அப்போ நானும், கன்னையனும் தூண்டி போட
போவோம். கண்ணையன் வந்து என் சித்தப்பா வீட்டுக்கு
எதிர் வீடு. நான் எங்க சித்தப்பா வீட்டோட சண்டைனால,
அங்க போக மாட்டேன் நானும்,கன்னையனும் வெளில
மீட் பண்ணிக்குவோம் .


ஆடி மாசம் ஆத்துல புதுத்தண்ணி வரும்.அந்த தண்ணில
ஏரி,குளம் எல்லாம் நிரப்பிக்குவாங்க அப்போ மீனெல்லாம்
ஒன்னும் இருக்காது.அந்த புது தண்ணி வந்தோன!
விவசாய வேலைய ஆரம்பிப்பாங்க தண்ணி வந்து
ரெண்டு,மூணு மாசத்துல எங்க ஊரு நாத்து பறிக்கிறது;
நாத்து நடுறது
அப்படின்னு ஊரே பச்சை பசேல்னு
ஆயிடும்.அப்போதான் கொக்குக எல்லாம் வந்து மேய
ஆரம்பிக்கும்.தூரத்துல இருந்து பார்த்தா வயல்ல கொக்கு
மேயிறது வந்து,பச்சை துணில வெள்ளை புள்ளி வைச்ச
மாதிரி இருக்கும்.கொக்குக மேயிறது கொள்ளை அழகு.


பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?


அதுபோல தான் இருக்கும் இந்த, கொக்குக மேயிரத
வேடிக்கை பாக்குறதும்.


சரி சரி மேட்டருக்கு வாரேன்! நெல்லு அறுவடை எல்லாம்
முடிஞ்சு வயல்ல கடல,எள் இதெல்லாம் போடுவாங்க
குளம்,ஏரில எல்லாம் தண்ணி குறைய ஆரம்பிக்கும்.
அப்போதான் தூண்டிபோட போவோம்.எங்க வீட்டு
ஏரியாவ தாண்டி போனா, சின்னதா ஒரு ஆறு வரும்.
அந்த ஆத்தோட பேரு கல்யாண ஓடை கால்வாய்
அந்த ஆத்த தாண்டிபோனா, ஒரு செம்மண் ரோடு வரும்
ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் வயல்தான்.வயல்ல
கடலை ,எள் இதெல்லாம் போட்டு இருப்பாங்க அங்கங்க
மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க.செம்மண் ரோடு வழியா
ஒரு கிலோமீட்டர் போனா ஏரி வந்துடும்.

எங்க ஊரு ஏரிய இப்போ நெனைச்சாலும் மனசு ரெக்கை கட்டி
பறக்குது.ஏரி பேரு விக்கிரமம் ஏரி ஏரி கரை ஓரத்துல வரிசையா
இலுப்ப மரங்களா இருக்கும்.மரங்க எல்லாம் கரைல சாய்ச்சி
வச்சது போல இருக்கும்.மர கிளைகள் எல்லாம் தண்ணில
நனைஞ்சபடி இருக்கும்.சின்ன பயலுவ எல்லாம் மரத்துல
ஏறி தண்ணில குதிப்பாணுவ நாங்களும்தான்!

சலவை கடை வைச்சு இருக்குறவங்க வழக்கமா அங்கதான்
துணி தொவைப்பாங்க!

சரி விசயத்துக்கு வர்றேன்....

தூண்டி முள்ளுல கோர்த்து விட மண்புழு வேணும்!
அழுக்கானசேத்துல தான் மண்புழு அதிகமா இருக்கும்.
மண்புழு எடுத்தாச்சு ஏரிக்கரை படிக்கட்டுல
உக்காந்துதான் தூண்டி போடுவோம்.

முள்ளுல மண்புழு வை கோர்த்து தண்ணில போட்டுட்டு
அந்த மெதக்குற தக்கைய வைச்ச கண்ணு வாங்காம
பார்த்துகிட்டே இருப்போம்.அந்த தக்கை லேசா அசைரத
பார்க்கவே செம திர்லிங்கா இருக்கும்.

லேசா அசையும் போது அவசர படக்கூடாது தக்கை
வந்து தண்ணிக்குள்ள முழுசா போகணும்.
இடது பக்கமா தக்கை போகும் போது, இடது பக்கமே
தூண்டி கம்ப ஒரு வெட்டு வெட்டி,வலது பக்கமா வெடுக்குன்னு
தூக்கணும் அப்போதான் மீன் மாட்டும்.


இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்?

அப்படிதான் இருக்கும், தூண்டில மீன் மாட்டி அந்த
தக்கை தண்ணிக்குள்ள போகும்போதும்.

ஒருதடவ நாங்க தூண்டி போட்டப்போ மண்புழு
கலியாயிடுச்சி, தூண்டில தண்ணில போட்டுட்டு
கம்புமேல ஒரு செங்கல்ல எடுத்து வைச்சுட்டு
ரெண்டு பேரும் மண்புழு தோண்ட போய்ட்டோம்
திரும்பி வந்து பார்த்தா என் தூண்டிய காணும்!
தேடி பார்த்தா நடு தண்ணில என் தூண்டி கம்பு
மெதந்து போயிட்டு இருக்கு எதோ ஒரு பெரிய மீன்
மாட்டி இழுத்துகிட்டு போகுது,என்ன பண்ணுறதுன்னு
யோசிக்கிறதுக்குள்ள கண்ணையன் சட்டைய
கழட்டிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுட்டான்.

வேகமா நீச்சல் அடிச்சு போய் தூண்டி கம்ப
புடிச்சுட்டான் புடிச்சு இழுத்துகிட்டு வர தினறுரான்.
வேணாம் கண்ணையா!!விட்டுட்டு வந்துடுன்னு
கத்துறேன்! கேக்காம புடிச்சு இழுத்துகிட்டு வர்றான்
எனக்கும் ஆர்வம் அதுல என்ன மீன் மாட்டி இருக்குன்னு
பார்க்க கண்டிப்பா பெரிய விரா மீன் தான் மாட்டி
இருக்கணும்னு நினைச்சேன்.கரைகிட்ட வந்துட்டான்
படிக்கட்டுல எறங்கி அவன் கைய புடிசுகிட்டேன் .
இன்னொரு கையால தூண்டிகம்ப புடிச்சுட்டேன் .
ரெண்டுபேரும் சேர்ந்து தூண்டி கம்ப மேல தூக்குறோம்
அவ்ளோதான் ''டப்'' ன்னு நரம்போட அறுத்துகிட்டு
போச்சு! ச்சே எவ்ளோ கஷ்ட்டப்பட்டு கண்ணையன்
இழுத்துகிட்டு வந்தான் அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு!

(இதுநடந்து ஒரு 22,23 வருஷம் இருக்கும் இப்போகூட அந்த தூண்டில மாட்டுனத பார்க்கலையேன்னு சின்ன பீல் இருக்கு )
>

என் சினிமா பார்வை

அழைத்த குடுகுடுப்பையாருக்கு நன்றி


1.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறந்தது, மூணாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்ல! அங்க எனக்கு நினைவு தெரிஞ்சு பார்த்த படம் வருவான் வடிவேலன் அந்த படம் பார்க்க நாங்க ஒரு ''போட்ல'' போனோம் ஒரு நாப்பது பேர் போகலாம் அந்த போட்ல. சின்ன கப்பல் போல இருக்கும்.நாங்க போன தியேட்டர் இருக்குற இடம் பேரு பம்பு பிளாட் படம் பார்த்து நினைவு இருக்கு, என்ன உணர்ந்தேன்னு தெரியல
ஏன் அப்படின்னா வரும்போது தூங்கிட்டேன்.

அப்புறம் நம்ம ஊருக்கு வந்து, எங்க ஊரு ஐயப்பா தியேட்டர்ல பார்த்த முதல் படம் கரை கடந்த ஒருத்தி '' ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு''
அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த படத்துல.

உணர்ந்தது அந்தமான்ல இருந்து வந்த புதுசு! அப்பா அம்மா கூட இல்லாம சொந்தகாரங்க யாரோ கூட்டிகிட்டு போனாங்க. பொம்பளைங்க கூட்டத்துகுள்ள
உக்காந்து பார்த்து. கூடவே சின்ன புள்ளைங்க அழுகை, சின்ன புள்ளைங்க சத்தம் அதிகமானா? திட்டு விழும் பாருங்க!!''ங்கொப்புறான ங்கொப்பன்தன்னான'' அழுவுற புள்ளைய கூட்டிகிட்டு எதுக்குடி படம்பாக்க வர்றீய! ஊட்டுலயே கெடக்க வேண்டியது தானே ? அதுக்கு புள்ளைய வைச்சு இருக்குறவங்க
திருப்பி சொல்லுறத இங்க சொல்ல முடியாது ! இதல்லாம் எனக்கு அப்போ
புதுசு!



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர்ல ரொம்ப ஆர்வமா போனேன்.''சிங்கமணி''வந்து..

( எல்லோரும் ''தங்கமணின்னே'' சொல்லுறாங்க கொஞ்சம் வித்யாசமா சிங்கமணி!'' தங்கம்'' போல மனைவி இருக்குறவங்க தங்க மணின்னு சொல்லிகோங்க ''எம்பொண்டாட்டி சிங்கம் மாதிரி'' அதான் சிங்கமணி)


சிங்கமணி வந்து ஆறு வருசத்துல அஞ்சு படம்தான் ஒன்னா பார்த்து இருக்கோம்
படம் பார்க்க அதிகம் போறதுல்ல!நான் மட்டும் எப்போவாவது சிங்கமணிகிட்டசொல்லாம போவேன்.
அந்த மாதிரித்தான் தசாவதாரம் போனேன் கமல் ஏமாத்திட்டாரு!


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


கன்னத்தில் முத்தமிட்டால் KTV ல போட்டாங்க ரொம்ப நாளைக்கு பிறகு மனசு கனத்து பார்த்த படம் .

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சேரனின் பொற்காலம் பட்டுக்கோட்டை நீலா தியேட்டர்ல ஊருக்கு போனப்போ பாத்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''


'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த
பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''


5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒன்னும் சொல்ல தோனல

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு ,வாரமலர், வெள்ளிக்கிழமை சினிமா மலர் அவ்ளோதான்

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜாதான்


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உண்டு, சின்ன வயசுல அந்தமான்ல இருந்ததால ஹிந்தி நல்லா தெரியும் (அப்போ) அங்க நெறைய ஹிந்தி படம் பார்த்தது உண்டு .
நூரி அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு இருக்கு.


அப்புறம் இப்போ பிளஸ் டு முடிச்சுட்டு கோயமுத்தூர்ல நகை தொழில் கத்துக்க போய் இருந்தப்போ அங்க அர்ச்சனா வில சாஜன்,தீவானா எல்லாம் பார்த்து இருக்கேன் .


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மருத நாயகம் படத்த, நான்தான் தயாரிக்க போறேன்னு சொன்னா

நம்பவாபோறீங்க

ஒரு தொடர்பும் கிடையாதுங்க!


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் நிறைய அரசியல்வாதிகளை உருவாக்கும்


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஒன்னும் பெருசா கவலை படமாட்டேன். ஆனா, எல்லா தொலை காட்சியும் மக்கள் தொலைக்காட்சியுடன் போட்டிபோடும்

நீங்களும் சொல்லுங்க

யட்சன்
புழுதிக்காடு
ரம்யா



>

கதை ஒன்னு கேளுங்க!!

இந்த கதை வந்து சாமர் செட் மாம் அப்படிங்கற ஆங்கில எழுத்தாளர் எழுதினது.
அத தமிழாக்கம் செய்து ஒரு புத்தகத்துல எழுதிஇருந்தாங்க,அத நம்ம ஸ்டைல்ல
சொல்லுறேன் கேளுங்க!!!

சுப்புரமணிக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல. சும்மா ஊர சுத்திகிட்டு இருந்தான்.
அவன்கிட்ட ஒருத்தர் வந்து, பக்கத்து ஊரு கோயில்ல மணி அடிக்கிற வேலை ஒன்னு இருக்கு போறியான்னு கேட்டார்? சுப்புரமணி சரி போறேன்னு சொன்னான்.அவரும் அட்ரஸ் கொடுத்து அனுப்பிவைச்சார்.


சுப்புரமணிய வந்து கவுண்டமணி
போல நெனச்சுகங்க. அவனும் கோயில்ல வேலை கிடைக்க போகுதுன்னு , சந்தோசமா கிளம்பி பக்கத்து ஊரு கோயில்ல வேலை கேக்குறான்.
கோயில்ல டெல்லி கணேஷ் போல ஒரு பூசாரி இருக்கார்.

சுப்புரமணி:-வணக்கம் சாமி, இங்க எதோ மணி அடிக்கிற வேலை காலியா
இருக்குன்னு சொன்னாங்க,அந்த வேலைய பாக்கலாம்னு
வந்தேங்கோ.


கோயில் பூசாரி :- ஆமாம்பா வேலை காலியாதான் இருக்கு,மணி அடிக்கிரதோட
கோயில் வரவு,செலவு கணக்கும் பார்க்கணும் சரியா ?
ஆமா?நீ என்ன படிச்சு இருக்கே ?


சுப்புரமணி:- சாமி நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதுஇல்லிங்கோ எனக்கு சுத்தமா எழுத படிக்க வராதுங்கோ.



கோயில் பூசாரி :- எழுத படிக்க தெரிஞ்சவங்களுக்குதான் இந்த வேலைய,
கொடுக்க முடியும். நீ நல்ல பையனா இருக்கே இப்போ
என்ன பண்ணுறது?..........சரி, உனக்கு ஆறுமாசம் டைம்
தரேன் அதுக்குள்ள நல்லா எழுத படிக்க கத்துகிட்டு வா!
உனக்காக இந்த வேலைய வேற யாருக்கும் கொடுக்காம
வைச்சு இருக்கேன்.போய்ட்டுவா!
சுப்புரமணி :- ரொம்ப நன்றி!சாமி நான்போய் எப்படியாச்சும் எழுத,படிக்க
கத்துகிட்டு வரேங்க!


ஊருக்கு வந்த சுப்புரமணி படிப்பு கத்துக்க முயற்சி பண்ணுறான் எவ்ளவோ
முயற்சி பண்ணியும் அவனுக்கு படிப்பு ஏறல.ஆறுமாசம் கழிச்சு மறுபடியும்
அந்த கோயில் பூசாரிய பார்த்து படிப்பு ஏறல எப்படியாச்சும் வேலைய போட்டுகொடுங்கன்னு கேக்குறான்.அதுக்கு அந்த பூசாரி வேலை கொடுக்க முடியாதுன்னு திட்டி அனுப்பிடுறார்.


சோகமா திரும்புற சுப்புரமணி, ஒரு பீடிய எடுத்து பத்த வைச்கிட்டு மெதுவா
நடந்து வர்றான் .பீடி முடிஞ்சு போகவே இன்னும் ஒரு பீடி பத்த வைக்கலான்னு
பீடி கடைய தேடுறான் அந்த ஏரியாவில எங்கயும் பீடி கிடைக்கல.

ஒடனே அவனுக்கு ஒரு யோசனை! இங்க ஒரு பீடி கடை வைச்சா என்ன ?
சரின்னு அக்கம்பக்கம் கொஞ்சம் கடன் வாங்கி, சின்னதா ஒரு பீடி கடை வைக்கிறான் .கடை நல்லா பிக் அப் ஆயிடுது.

கொஞ்ச நாள் கழிச்சு பெரிய பணக்காரனா ஆயிடுறான்.சொந்தமா வீடு கட்டி
கோவை சரளா மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிறான்.

நெறைய பணம் இருக்கவே,அவன் பொண்டாட்டி சொல்லுது! ஏனுங்க மாமா!
இவ்ளோ பணத்தையும் வீட்டுல வைச்சு இருக்கீங்க பேங்க்ல போட்டா
வட்டி வரும்ல அப்படின்னு சொல்ல, அவனும் சரி அம்மிணி ன்னு பெரிய
தொகை எடுத்துகிட்டு பேங்க்கு போறான்.

பேங்குல நெறைய பணம் கொண்டு போனதால, இவனுக்கு நல்லா மரியாதை!
அங்கவினு சக்ரவர்த்தி போல ஒரு மேனேஜர் இருக்கார் .அக்கவுண்ட்ஆரம்பிக்க கையெழுத்து போட சொல்லுறார். ஒடனே சுப்புரமணி சொல்லுறான்
எனக்கு கையெழுத்து போட வராது மேனேஜர் கைநாட்டு தான் அப்படின்னு .

மேனேஜருக்கு
ஆச்சர்யம்! ஏன்பா!எழுத படிக்க தெரியாமயே இவ்ளோ பணம்
சம்பாதிச்சு இருக்கே! நீமட்டும் படிச்சு இருந்தா இன்னும் பெரிய ஆளா ஆகி
இருப்பே போல இருக்கே ? அப்படின்னு சொல்ல அதுக்கு சுப்புரமணி சொல்லுறான்,


''எனக்கு மட்டும் எழுத, படிக்க தெரிஞ்சு இருந்தா இந்நேரம் ஒரு கோயில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்''

------------------------------------------------------------------------------------------------











>

மிளகாய்ச் செடி

அப்போ எனக்கு பத்து,பதினோரு வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க.
கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).

எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.

ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.

காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.
ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன்.
செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.

ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!

மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!

நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.

மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.
அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் ல அதே நெனைப்புதான்.
ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,
மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.


சாயங்காலம் ஸ்கூல் ல இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம்
எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு
சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!


அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு
சொத்து பிரச்சினையாம் காரணம்.
சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.
சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .
கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க!
சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!

சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !

அந்த கிலுவை வேலி ஓரமா! நான் வச்ச! நான் வச்ச! என் மிளகாய் செடில!

அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!

அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !

(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )

>

சுகமாய் ஒரு பிரசவம்

இரவு எட்டு மணி இருக்கும் வலி லேசா ஆரம்பிச்சது . என் அம்மாவும், மாமியாரும் இருக்காங்க, அக்கம்பக்கத்துல இருக்குற சிலரும் இருக்காங்க .

வலி அதிகமில்ல காலைல ஆஸ்பத்திரில சேத்துக்கலாம்னு ரெண்டுபேரும் சொல்லுறாங்க .
நான் வந்து என்ன சொன்னேன்னா, நடுராத்திரில வலி அதிகமானா என்ன பண்ணுறது அப்போ போய் ஆட்டோ புடிக்க முடியாது இப்போவே போய் ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்னு சொன்னேன் . (ஆமாங்க வலி என் மனைவிக்கு)
இல்ல பார்த்துக்கலாம் இருடான்னு எங்கம்மா சொல்ல !

இப்போ போனா ஆஸ்பத்திரில சும்மா தான் உக்கார்ந்து இருக்கணும்னு என் மாமியார் சுவத்து பக்கம் பார்த்து சொல்ல (அவங்க என்ன நேரா பார்த்து பேச மாட்டங்க எதிர்ல நிக்கக்கூட மாட்டாங்க )

நான் கேக்காம புடிவாதமா ஆட்டோ புடிச்சுகிட்டு வந்துட்டேன் !

எங்கம்மா வந்து, ஏன்டா எங்களுக்கு தெரியாது ? என்னமோ ஏழு புள்ள பெத்தவனபோல அவசரமா ஆட்டோ புடிச்சுட்டு வர்றே ?

அப்படின்னு சொல்லிட்டு, நாங்க சொன்னா கேக்கவாபோறே ? ன்னு சொல்லி
துணி மணியெல்லாம் எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாங்க .

ஆஸ்பத்திரில சேத்தாச்சு !வலி கொஞ்ச கொஞ்சமா அதிகமாகுது !

மணி பதினொன்னு ஆக போகுது வலி பொறுக்காம மனைவி போடுற சத்தத்த கேட்டு எனக்கு பயம் வந்துடுச்சி
என் அம்மாவும்,மாமியாரும் என் மனைவி சத்தத்த பத்தி பெருசா எடுத்துக்காம
சாதாரணமா இருக்கவே,சரி இந்த சத்தமெல்லாம் சகஜம் போல ன்னு நான்
கொஞ்சம் தைரியமா இருந்துட்டேன் .

ஆஸ்பிட்டல்ல சிஸ்டர் வந்து, நைட் இங்க யாராவது ரெண்டுபேர்தான் தங்கலாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க .

என் மனைவி அவங்கம்மா கைய புடிச்சுகிட்டு,நீ போய்டாதம்மா இரும்மா ன்னு
சொல்ல, எங்கம்மா வேற வழி இல்லாம கிளம்பிட்டாங்க !
மணி பன்னண்டுக்கு மேல ஆகுது .

ஆஸ்பத்திரில நாலஞ்சு சிஸ்டர் அப்புறம்,ரெண்டு பேர் மட்டும் இருக்காங்க !

நான் ஒரு சோபால உக்கார்ந்து இருக்கேன் !

மனைவி சத்தம் போட போட பதட்டம் தாங்கல,
என்னான்னு போய் பாருங்க ன்னு மாமியார்கிட்ட சொல்ல, அப்போகூட அவங்க
வெக்கபட்டுகிட்டு அந்தாண்ட போறாங்க என்னைய உள்ள விட மாட்டுறாங்க
அப்படின்னு கீழ குனிஞ்சுகிட்டு சொல்லுறாங்க !

அங்க இருக்குற சிஸ்டர் எல்லாம் சகஜமா அரட்டை அடிச்சுகிட்டு இருக்கவே,
என்னங்க சிஸ்டர் சத்தம் போடுறாங்க போய் பாருங்க ன்னு நான் சொன்னதும்

இதோ பாருங்க சார்!

இப்போ டாக்டர் வருவாங்க ! ரெண்டு,மூணு மணிபோல தான் டெலிவரி ஆகும் . டென்சன் ஆகாம போய் உக்காருங்க . அப்படின்னு சொல்லுறாங்க .
ஒரு மணி இருக்கும், என் மனைவி போடுற சத்தம் அவ குரல் போலவே இல்ல !
என்னால உக்கார முடியல !
ஒன்ற மணி போல என் மாமியார் கொஞ்சம் தள்ளி ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க !
என்னான்னு பார்த்தா ! தேம்பி !தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க !
அய்யய்யோ என்னமோ ஆச்சு போலன்னு நான் அலறி அடிச்சுகிட்டு என்ன ஆச்சு
சொல்லுங்கன்னு கத்துறேன், அப்போ ஒரு சிஸ்டர் வந்து என்னங்க அழுதுகிட்டு இருக்கீங்க ?டாக்டர் வந்துட்டாங்க சீக்கிரம் போய் துணியெல்லாம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல ,
ஒடனே போய் ஒரு வேட்டி துணிய எடுத்துகிட்டு வர்றாங்க !

மணி ரெண்டர ஆகுது சிஸ்டர் துணியெல்லாம் வாங்கிகிட்டு உள்ள போய்ட்டாங்க !
ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !

திக் திக்ன்னு இருக்கு !

கதவு பக்கத்துல மாமியார் நிக்குறாங்க, நான் கொஞ்சம் தள்ளி நிக்குறேன் !

ஒரு சிஸ்டர் வெளில வர ! என்னாச்சுன்னு கேட்டா ?

கொஞ்சநேரம் ஆகும் வழில நிக்காதிங்க ஓரமா நில்லுங்கன்னு வெரட்டுது

இது நடந்தது அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ என்கிட்டே செல்போனும் இல்ல

ஒரு துணையும் இல்லாம ! என்ன செய்றதுன்னு தெரியாம !நான் நின்ன நெலமை எனக்குத்தான் தெரியும் .

கொஞ்ச நேரத்துல ஒரு சிஸ்டர் வந்து என் மனைவி பேர சொல்லி அவங்க ஹஸ்பெண்ட் யாருங்க ?

நாந்தான்னு சொல்ல, டாக்டர் உங்கள இங்கேயே இருக்க சொன்னாங்க எங்கயும் போயிடாதிங்க ன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க !

அவ்வளவுதான், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுச்சு !

லேசா நடுக்கம் வந்துடுச்சு எனக்கு ! கைய கட்டிக்கிட்டு அப்படியே சுவத்துல சாஞ்சி நின்னுகிட்டேன் !

மனசுக்குள்ள முதன் முதலா சாமிய வேண்டுனது அப்போதான் !

நாலர மணி வரை அப்படியே நிக்குறேன், அஞ்சு மணிக்கு என் அம்மா வந்துட்டாங்க !

சும்மா சும்மா என் அம்மாவ பார்த்து எரிஞ்சு விழுற எனக்கு,அப்போ என் அம்மாவ பார்த்து எனக்கு வந்த ஒரு தைரியம் சொல்லி விளக்க முடியாது !

என்ன ஆச்சு ன்னு அம்மா கேக்க !

நான் வாயத்திறந்து ஏதும் சொல்லும் போது என் குரல் உடைந்து விடும்னு

பயத்துல ஒன்னும் இல்ல ன்னு தலைய மட்டும் அசைக்கிறேன் .

என் அம்மா வந்து மாமியார்கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டு அவங்க கிட்ட
போய் பேசிகிட்டு இருக்காங்க !


சரியா மணி அஞ்சு நாப்பத்தி ஒன்னு !

எல்லோரும் சந்தோசமா கேளுங்க !

'' ஒரு சிஸ்டர் வெளிய வந்து பெண் குழந்தை பிறந்துருக்கு ''

அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க ''


அப்பாடா !!

ரெண்டுஅப்போ எனக்கு வந்த சந்தோசம்,நிம்மதி, இதைஎல்லாம் என்னால சொல்லவே முடியாது .

கொஞ்ச நேரத்துல என் பொண்ணை ஒரு சிஸ்டர் வெளில கொண்டுவந்து காட்டுறாங்க .


''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''


இப்போ எனக்கு என் மனைவிய உடனே பார்த்தாகனும் !


உள்ள போகலாமா ன்னு கேட்டா வெயிட் பண்ண சொல்லுறாங்க !

கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் மனைவிய பார்க்குறேன் !

''சினிமால வர்றதுபோல நெகிழ்ச்சியோட கண் கலங்கல ''

'' குழந்தைய பார்த்திங்களான்னு அவ கேக்கல ''

லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!
>

என்ன சொல்லி ? எப்படி உணர்த்தி கூப்பிட்டு இருக்கும் அந்த யானை ?


கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ்ல ஒருகாட்சி ,ஒருகாட்டு பகுதில வனத்துறையினர் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைச்சு இருக்காங்க ! அதுல தவறிபோய் ஒரு குட்டியானை விழுந்துடுது . தாய் யானை வந்து அந்த குட்டியானையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணுது முடியல . உடனே அந்த தாய் யானை காட்டுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுடுது . கொஞ்ச நேரத்துல திரும்பி வர்ற அந்த யானை அது கூட முணு யானைங்கள கூட்டிகிட்டு வருது எல்லா யானைங்களும் சேர்ந்து அந்த குட்டியானைய காப்பாத்தி கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போய்டுது .நம்மையெல்லாம் ஆச்சர்யபடவைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி இது .


அதுசரி ? காட்டுக்குள்ள போன தாய்யானை என்ன சொல்லி எப்படி உணர்த்தி மத்த யானைகளை கூப்பிட்டு இருக்கும்!!!!

.....................................................................................................................................................................

>

ஒரு கதை

இந்த கதைய சமீபத்துல ஜெயா டிவி ல சொன்னாங்க ....

ஒரு ஊருல ஒரு புருஷன் பொண்டாட்டி, முணு புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் .

புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும் பொண்டாட்டிகாரி சொல்லுறா ,... இந்த வீட்டுக்கு நான்தான் அதிக வேலை செய்யுறேன் துணி தொவைக்கிறது,சமைக்கிறது ,புள்ளைங்கள கவனிக்கிரதுன்னு எனக்குதான் வேலை அதிகம்னு .
புருஷன் சொல்லுறான் .... நான்மட்டும் என்ன ? சும்மாவா இருக்கேன் ,இந்த குடும்பத்துக்காகத்தான் மாடா உழைக்கிறேன் வெயில்லயும் மழைல அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்யுறேன் அப்படின்னு ...


சண்டை அதிகரிச்சுகிட்டே போகுது இவங்க சத்தம் தாங்க முடியாம ,அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார்!
ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்ன விவரம்ன்னு கேக்குறார் ?
ரெண்டுபேரும் நான்தான் அதிக வேலை செய்கிறேன் !!நான்தான் அதிக வேலை செய்கிறேன் !! அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்லுறார் ,,, அதாவது புருஷனை பொண்டாட்டியாகவும்,பொண்டாட்டியை புருஷனாகவும் மாத்திடுறேன் புருஷன் வேலைய பொண்டாட்டியும் ,பொண்டாட்டி வேலைய புருசனும் பாருங்க யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்னு சொல்லுறார் .


ரெண்டுபேரும் ஒத்துகிறாங்க !! அதுபோல கடவுள் ரெண்டுபேரையும் மாத்திடுறார்

இப்போ புருஷன் காரன் காலைல சீக்கிரம் எழுந்து புள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பிவிட்டு ,டிபன் பண்ணி ,பாத்திரம் கழுவி , புருஷனை வேலைக்கு அனுப்பி ,வீடுபெருக்கி ,மதியம் சாப்பாடு பண்ணி , புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து , அப்புறம் மாலை ஆனதும் துணி தொவைச்சு ,அப்படி இப்படின்னு பெண்டு நிமிருது !!

கொஞ்சநாள் கழிச்சு புருஷன் ஒத்துகிறான் பொண்டாட்டிக்குதான் வேலை அதிகம்னு !

அவனால சமாளிக்க முடியாம கடவுள் கிட்ட போய் என்னால முடியல மறுபடியும் என்ன ஆம்பிளையா மாத்திடுங்கன்னு !

உடனே கடவுள் இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!

அவனும் ஒத்துகிறான் ...................

சரி... கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !

சரி என்னை ஆம்புளையா மாத்துங்க ன்னு சொல்லுறான்
அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!
>

மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்)

.
என்னை வியக்கவைத்த, பெண்களில் ஒருவர் பகத் சிங்கின் தாயார் .
ஏன் ? சொல்லுகிறேன் கேளுங்கள்
ஆங்கிலேயர்களின் சட்ட சபையில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பகத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கிறது ஆங்கில அரசு !!!
தண்டனையை ஏற்று கொண்ட பகத் சிங் சிறைச்சாலையில் ,ஆங்கில சிறை அதிகாரிகளிடம் சற்றும் வளைந்து கொடுக்காமல் வீரத்துடனும் ,இறுமாப்புடனும் நடந்து கொள்கிறான் .
பகத் சிங்கை எப்படியும் வழிக்கு கொண்டுவர நினைத்து ,
பகத் சிங்கிடம் நீ , மன்னிப்பு கேள் ! உன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என சொல்லுகிறது ஆங்கில அரசு !!
அதற்கு பகத்சிங் , உங்களிடம் மன்னிப்பு கேட்டு உயிர் வாழ்வதை விட ,மரணம் அடைவதயே விரும்புகிறேன் என்று சொல்ல ,ஆங்கில அரசுக்கு மகா எரிச்சல் !!
உடனே ,ஆங்கில அரசு அதிகாரிகள் , பகத் சிங்கின் தாயாரிடம் சென்று உன் மகனை மன்னிப்பு கேட்க சொல் அவன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என கேட்கிறார்கள் .
ஒரு மகன் உயிர் வாழ்வதில் எந்த தாய்க்குத்தான் விருப்பம் இருக்காது ?
ஆனால் ?
ஒரு மாவீரனை பெற்றெடுத்த வீரத்தாய் அல்லவா அவள் !
” மன்னிப்புகேட்டு என் மகன்உயிர் வாழ்வதைவிட மரணம் அடையட்டும்”
என்று கூறி விடுகிறாள்
கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரிகள் ,சரி அவன் மன்னிப்பு கேட்க வேண்டாம்
நீ மன்னிப்புகேள் , அவனை விடுதலை செய்கிறோம் என கேட்க !
அதற்கும் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை அந்த வீரத்தாய் !!
மன்னிப்பு கேட்க மறுத்து விடுகிறாள் !!!
தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறான் பகத்சிங் ,தூக்கில் போடுவதற்க்காக
பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள் உடனே ,பத்சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறான் ……….
மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது …. அவன் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது .
துக்க வெள்ளத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்களாம் ..
( பிள்ளைஎன்று பிறந்தால் பகத்சிங்கின் தாய் போல ஒருதாய்க்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் .இல்லைஎன்றால் அவன் அஸ்தியை வயிற்றில் பூசி கொண்டார்களே அந்த தாய்மார்களுக்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் )

>