மார்கழி நினைவுகள் ..!

மார்கழி அப்படின்னு சொல்லும்போதே மனசுல ஒரு ஜில்லும்,உடம்புல ஒரு குளிரும் உண்டாகுது ...! மார்கழியின் முழு அழகையும் அனுபவிக்கணும்னா அது எங்க ஊருமாதிரி ஒரு கிராமத்துலதான் முடியும்..! விநாயகனே வினை தீர்ப்பவனே இந்த பாட்டை எப்போ கேட்டாலும் மார்கழியின் அதிகாலை பொழுதுகள் நினைவுக்கு வந்துவிடும் எல்லா கோயில்களிலையும் இந்த பாட்டுடன்தான் துவங்கும் மார்கழி காலை.

மார்கழி கோலங்கள்

நான் சின்ன வயசு புள்ளயா இருந்தப்போ எங்க வீட்டுல கரண்ட் கிடையாது
அப்பக்கம் பக்கத்து வீடுகளிலையும் பெரும்பாலும் கரண்ட் இருக்காது .! தெருவில எல்லோரும் அதிகாலைல எந்திரிச்சு மண் எண்ணை விளக்கு வெளிச்சத்துல கோலம் போடுவாங்க நானும் சில சமயம் அந்த நேரத்துல எந்திரிச்சு எங்கம்மா கோலம் போடுறத வேடிக்கை பார்ப்பேன்..!

அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு மெயின் ரோட்டுல உள்ள டீக்கடை க்கு தனியா போயி டீ வாங்கிட்டு வர்ற அளவுக்கு பெரிய பையனாயிட்டேன்.
காலைல கோலம் போடும் போது என்னைய எழுப்பி டீ வாங்கி வர சொல்லுவாங்க எந்திரிக்கவே மனசு இல்லாம எந்திரிச்சு ஒரு போர்வைய போர்த்திகிட்டு மெதுவா நடந்து போயி ஒரு சொம்புல வாங்கி வருவேன் .
வாதா மரத்து டீக்கடை அப்படின்னு ஒரு கடை இருக்கும் அதிகாலைலையே
நல்ல கூட்டம் இருக்கும் அந்த கடைல.


கோலம் போட்டு சாணியில புள்ளையார் செய்ஞ்சு கோலத்து நடுவில வைச்சு அதுமேல பரங்கி பூ வைப்பாங்க நான் சில சமயம் பரங்கி பூ பறிச்சு கொண்டுவருவேன். பரங்கி பூ காம்பு மெல்லிசா இருந்தா அந்தபூவில காய் காய்க்காது அந்த மாதிரிபூவதான் பறிக்க விடுவாங்க. சில பேரு பரங்கி பூ கூட நெறைய தும்பைபூவ பறிச்சு கொட்டி வைச்சு இருப்பாங்க தும்பை பூவ பறிக்க நெறைய பொறுமை வேணும் தும்பை செடி நல்லா பனியில நெனைஞ்சு இருக்கும் குளிரில பொறுமையா பறிக்கணும் தும்பைப்பூ அழகா வெள்ளயா இட்லி போல இருக்கும்.


மார்கழி காலை வெய்யிலுக்கு நெறைய வாடிக்கையாளர்கள் உண்டு..! குளிர் பொறுக்கமுடியாம வெய்யில் வந்தஉடன் வெய்யிலில் குளிர் காய்வது ஒரு சுகம் .மார்கழி காலை வெய்யிலுக்கு ஒரு நிறம் உண்டு மஞ்சள் கலந்த ஒரு பொன்னிறமாய் இருக்கும். பெரிய சிந்தனை வாதிபோல முகத்தை வைத்து கொண்டுவாய்திறந்து பேசகூட சோம்பல் பட்டு கொண்டு குளிர் காய்வதே ஒரு அலாதி சுகம் தான்.

பூ வாசம் வீசும் மார்கழி மாசம்

பொதுவாக கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வாசனையை உணர முடியும். சித்திரை மாதத்தில் ஒரு வரட்சியுடன் கூடிய மாம்பூ,மற்றும் பனம்பூ வாசனை வீசும்.மழைகால மாதங்களில் சேற்று வாசனையுடன் கூடிய தவளைசத்தம் கேட்கும். மார்கழியில் ...... மழை பெய்யும்போது மண்வாசனை வருவதுபோல பனி பொழிவிலும் ஒருவகை மண்மணம் தோன்றும்..! அதுமட்டுமல்ல மார்கழியில் எல்லாவகை பூக்களுமே பூத்து குலுங்கும் . பெயர் தெரியாத பல காட்டுப்பூக்களும் பூத்து வாசனை வீசியபடி இருக்கும் .பனியில் நனைந்த புற்களும் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் இப்படி பனியில் நனைந்த மண்மணம்,ஒட்டுமொத்த பூக்களின் ஒரு கதம்ப மணம் ஈரமான புற்கள் வாசனை என மார்கழி முழுவதும் ஒரு ரம்மிய மணம்
வீசியபடி இருக்கும்.


நான் +2 படிக்கும் போது கடந்து போன மார்கழிய மறக்கவே முடியாது காலைல 5.30 க்கு டியூசன் னுக்கு போவேன் அது ஒரு பொற்காலம். மத்த நாள்களில் லேட்டா போனாலும் போவேன் ஆனா இந் மார்கழில மட்டும் சரியா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன். காலைல அஞ்சு மணிக்கு எழுந்து குளிக்காம கொள்ளாம பல்லு வெளக்கி முகம் கழுவி பேர் அண்ட் லவ்லி போட்டுக்கிட்டு கிளம்பிடுவேன்.

பேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ண ஆரம்பிச்சது +1,+2 படிக்கும்போதுதான்
அப்போதான் முதன்முறையா பொம்பள புள்ளைங்களோடு சேர்ந்து படிச்சது .
ஆளு தேவாங்கு மாதிரி இருந்தாலும் மனசுக்குள் ஒரு ஹீரோன்னு நெனைப்பு அப்போ.

சரி விசயத்துக்கு வரேன் ..! மார்கழி காலைல தவறாம சீக்கிரம் எழுந்து போக காரணம் என்னன்னா ? நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க கோலம் போடுறத பார்க்கத்தான்...! லேட்டா போனா மிஸ் ஆயிடும்...! ஒரு பழைய சைக்கிள் வைச்சு இருந்தேன் நம்ம புள்ளைங்க போடுற கோலத்துல மட்டும் சைக்கிள் விடாம கொஞ்சம் ஒதுங்கி போனா அதுங்க நம்மள ஒரு தேங்க்ஸ் பார்வை பார்க்கும் பாருங்க அடடா ...! அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..! அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க் ஆரம்பிச்சுடும் ..!



டியுசனுக்கு நாங்கதான் குளிக்காம லுங்கி கட்டிக்கிட்டு போவோம் ஆனா பொம்பள புள்ளைங்க அப்படி இல்ல நல்லா குளிச்சுட்டு அதிகாலைலையே
ப்ரெஷ் ஆ ஜில்லுன்னு வருவாங்க அதுக்காகவே டியுசன மிஸ் பண்ண மாட்டோம்...!

ம்ம்ம் எல்லாம் போச்சு இப்போ கலண்டர பார்த்துதான் மார்கழி மாசம்னே தெரியுது ...!



.

>