சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்...
உச்சி பொழுது முதலே அந்த பதிநான்கு வயது சிறுவன் வயல் வெளியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டுவதும்..எதையோ தேடுவதுமாக இருந்தான்..!
இருள் கவ்வ தொடங்கியது அவன் முயற்சியை விடுவதாக இல்லை..! அருகில் இருந்த குடிசையில் இருந்து வெளிவந்த அவனது தாய் கிடைத்ததா என கேட்க இல்லையென கவலையுடன் தலையாட்டுகின்றான். சரி காலையில் பார்த்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருவரும் சென்று விடுகின்றனர்..!
விஷயம் இதுதான்..! அவனது தந்தை,தாய் இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள்.அவ்வப்போது இவனும் கூலி வேலைகளில் பங்கெடுத்து கொள்வான்.அதற்கென அவனுக்கும் கூலியாக செப்பு காசுகள் கிடைக்கும்.அந்த காசுகளை எல்லாம் சேமித்து ஒரு மண் கலயத்தில் வைத்து இருந்தான். அதனை பாதுகாப்பாக வைக்க நினைத்து ஒரு இரவு வேளையில் அந்த மண்கலயத்தை வயலில் புதைத்து வைத்து விட்டான். வைத்த இடம் மறந்து போயிற்று..அதைத்தான் தேடி கொண்டு இருக்கின்றான்...!
இப்போது அதனை தேட காரணம்...?
அவர்கள் இருந்த இந்த கிராமம் பஞ்சத்தில் அடிபட்டு கடும் வறட்சியால் பாதிக்க பட்டுவிட, அங்கு வசித்து வந்த மக்கள் ஒரு சிறுகுழுவாக கூடி பேசி வேறு இடத்துக்கு இடம் பெயர முடிவு செய்தாகி விட்டது.அதன் படி மறுநாள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட ஆயத்தம் ஆயினர்..!
அதிகாலையிலேயே எழுந்து தேட துவங்கினான் பலன் இல்லை...!மூட்டை முடிச்சுகளை மாட்டு வண்டிகளில் ஏற்றி விட்டு அவன் தாய்,தந்தையும் கூடவே தேடினர் செப்புகாசுகள் ஆயினும் வழி செலவுக்காவது உதவுமே...! ம்ஹூம் அவன் சொன்ன அடையாள இடங்களில் எல்லாம் தேடி ஆகிவிட்டது..! கிடைக்கவே இல்லை..!அனைவரும் கிளம்பி விட்டனர் சிறுவனோ அழ ஆரம்பித்து விட்டான்...! இனி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை..!தாயும்,தந்தையும் அவனை தேற்றி அழைத்து செல்ல அவனும் அழுது கொண்டே போய்விட்டான்...!
அவர்கள் செல்ல திட்டம் போட்டு இருக்கும் இடமானது எப்படியும்நூறு மைல் தொலைவு இருக்கும்...! ஆங்காங்கே தங்கி ...கொண்டுசென்ற உணவு பொருட்களை சமைத்து உண்டு ஓய்வெடுத்து சென்றனர்..! ஒரு மதிய வேளை ஒரு பெரிய ஆலமர நிழலில் உண்டு ஓய்வெடுத்து கொண்டு இருந்தனர் அப்போது அவ்வழியே ஒரு வண்டியில் ஒரு மகானை போன்ற தோற்றம் கொண்டவர் உதவியாளர்கள் சிலருடன் சென்று கொண்டு இருந்தார். மர நிழலை கண்டவுடன் அவர்களும் ஓய்வெடுக்க எண்ணி இறங்கி அமர்ந்தனர். அந்த மகான் அங்கு இருந்த அனைவரிடமும் அன்புடன் பேசி ஆசி வழங்கினார்...!
அப்போது கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த இந்த சிறுவனை அருகில் அழைத்தார்..! என்ன உன் கவலை என அவனிடம் பரிவுடன் கேட்க அவனது தாய் விஷயத்தை சொல்ல அந்த மகான் அவனது தலையில் கை வைத்து..இப்படி சொன்னார்...!
உனது தூய்மையான உழைப்பில் கிடைத்த அந்த பொருள் நிச்சயம் உனக்கு கிடைக்கும்..! இந்த பிறவியில் இல்லாவிடினும் எந்த பிறவியிலாவது அந்த காசுகள் உன்னை வந்து சேரும்..!
என சொல்லி புறப்பட்டார்...!
சற்று ஆறுதல் அடைந்த அவனை பார்த்து அவனது தாய் கேட்டாள்...? எத்தனை காசுகளடா அதில் வைத்து இருந்தாய்..?
எழுபத்து இரண்டு காசுகள் அம்மா என்றான்....!
v
v
v
v
v
v
திடுக்கென விழிப்பு வந்தது எனக்கு...! என்ன கனவு இது...? வேகமாக எழுத்து லைட்டை போட்டேன் ...! பீரோவை அவசரமாக திறக்க...! லைட் வெளிச்சத்தில் விழித்து கொண்ட மனைவி இந்த அர்த்த ராத்திரியில எதுக்கு லைட்ட போட்டு பீரோவ திறக்குறீங்க..? என அரைகுறை தூக்கத்தில் கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமல்..! பீரோவில் இருந்த அந்த பொட்டலத்தை பிரித்தேன்...! பச்சை நிறம் படிந்த செப்புக்காசுகள் ..! இப்போது அதனை தொடும் போது லேசாக நடுங்கியது...! நேற்று இதை எண்ணிப்பார்க்கவில்லை..! இப்போது எண்ணினேன் சரியாக எழுபத்து இரண்டு காசுகள்....!! .உடல் முழுவதும் அப்படியே சிலிர்த்து போனது ..! வியர்த்து கொட்டியது ஸ்தம்பித்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன்...!
நடந்தது இதுதான்...!
நேற்று மதியம் நகைபட்டறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்த போது ஒரு பெரியவர் வந்து சில காசுகளை கொடுத்து இது என்ன காசுகள் என கேட்டார்..! கையில் எடுத்த உடனேயே இது பழங்கால செம்பு காசுகள் என தெரிந்தது. இவை செம்பு காசு என்றவுடன் அவருக்கு ஏமாற்றம்...பெரிதாக எதிர் பார்த்து வந்து இருப்பார் போல..அவர் திருப்திக்காக கொஞ்சம் திராவகம் வைத்து சோதித்து பார்த்தேன் பச்சையாக பொங்க..இவை அந்த கால செம்புகாசு என சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன்..!அவரும் அதனை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்..!
ஒரு மணி நேரம் இருக்கும் மீண்டும் திரும்பி வந்தவர்..! இன்னும் நிறைய காசுகளை காட்டினார்...!இரண்டு கைப்பிடி அளவு காசுகள் இருந்தன...இவற்றை விற்க விரும்பி ஒரு பழைய பாத்திர கடைக்கு சென்றாராம் அங்கே காசுகளை எடை போட்டு பார்த்து விட்டு அவற்றை இருபது ரூபாய்க்கு மட்டும் எடுத்து கொள்வதாக சொன்னார்களாம்..! அவ்வளவு தானா இதன் மதிப்பு என கேட்டார்..செம்பு என்ற வகையில் அவ்வளவுதான் போகும் என்றேன்...! சரி என கிளம்பியவரிடம் இருவது ரூவாய்க்குதானே கேட்டாங்க இருபத்து அஞ்சு ரூவா தரேன் கொடுக்குறீங்களா என கேட்டேன்... அவரும் சற்று திருப்தியுடன் கொடுத்து விட்டு பணம் வாங்கி சென்றார்...!
இது ஏது என கேட்ட போது வயலில் பாசனத்துக்காக கிணறு தோண்டிய போது சிறிய மண் பானையில் கிடைத்ததாக சொன்னார் ...!
////உனது தூய்மையான உழைப்பில் கிடைத்த அந்த பொருள் நிச்சயம் உனக்கு
கிடைக்கும்..! இந்த பிறவியில் இல்லாவிடினும் எந்த பிறவியிலாவது அந்த
காசுகள் உன்னை வந்து சேரும்..!///
ஒரு வேளை அந்த கனவில் வந்த மகான் சொன்னதில் எதும் உண்மைஇருக்குமோ...???
...............................................................................................................................................................
பின் குறிப்பு;- கிட்ட தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1995 வாக்கில் இந்த காசுகளை வாங்கியது உண்மை தான்...! அவை சோழர் கால நாணயங்கள் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்..!பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து உள்ளேன் அந்த காசுகளை...கையில் எடுக்கும் போது ஏதோ ஒரு உணர்வு ...!அதன் பிரதிபலிப்பே அந்த கற்பனை கனவு ...! கனவு மற்றும் பிற விஷயங்கள் என் கற்பனை..மட்டுமே..! இதோ இவைதான் அந்த காசுகள்...!
..