அனுபவிக்க இனி ஒன்றுமில்லை கடமைதான் பாக்கி (35+)

பத்து பதினைந்து வயதில் வாழ்க்கை குறித்த பயம் இல்லை ஆனால் ஆசைகள் மிக அதிகமாகவே இருந்தது. . அதன் பிறகு வாலிப வயதிலும் அப்படியே ..! திருமண வயதில் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது.

திருமணம் முடிந்தும் குழந்தை, சம்பாத்தியம், குடும்பத்தின் அடிப்படை தேவைகள் என இலக்குகள் இருந்தன...! சம்பாத்தியம் ,திருமணம் ,இல்லறம் ,குழந்தைகள் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று.

குழந்தைகளின் மழலைத்தனம் மாறி வளர துவங்க... கடந்த காலங்களில் வாழ்க்கையில் நாம் அனுபவிக்காமல் எதையும் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் இருந்தது . ஆனால் முப்பத்தைந்து வயதில் அநேகமாக எல்லா முக்கியமான விசயங்களையும் அனுபவித்து விட்டதாகவே தோன்றுகிறது ..!

சரி, இனி அடுத்த பதினைந்து வருடங்கள் எப்படி இருக்கும் ..? இந்த காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டியவை,செய்யவேண்டிய கடமைகள் என்ன ..? அனுபவிக்க வேண்டிய விசயங்களை தேடினால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை..!

ஆனால் ..! கடமைகள் நிறையவே காத்திருக்கிறது..! குழந்தைகளின் கல்வி , அவர்கள் ஆரோக்கியம், நகரத்தில் நாகரிகம் என்ற பெயரில் நிரம்பியிருக்கும் கலாசார குப்பைகளில் இருந்து அவர்களை காக்க வேண்டும் . கிராமங்களைவிட புவியீர்ப்பு விசை குறைவான நகரத்தில் இருந்துகொண்டு கிராமங்களின் ஈர்ப்பினை புரியவைக்க வேண்டும். நல்ல தமிழை கொடுக்க வேண்டும் .இப்படி பட்டியல் நீளுகிறது...!

ஒன்று மட்டும் புரிகிறது அடுத்த சில வருடங்களுக்கு என்னை சற்றும் ஓய்வெடுக்க விடாமல் கடமை துரத்தி கொண்டே இருக்க போகிறது அது மட்டும் நிச்சயம்.

சில சமயம் தோன்றும் அயர்ச்சியில் இப்படி கூட நினைப்பதுண்டு சட்டென ஒரு பத்து வருடம் போய்விடாதா என்று ...! எனக்காக வேண்டுமானால் பதவி ,புகழ் என எதாவது இலக்கை வைத்துகொண்டு செயல் படலாம், ஆனால்..! அடிப்படை கடமைகளை நிறைவேற்றாமல் எந்த வெற்றியும் ருசிக்கபோவதில்லை.

சரி இனிமேல் அவ்ளோதானா..! என்றால் அதைத் தாண்டி குழந்தைகள் திருமணம், பேர குழந்தைகள் என உறவின் பாற்பட்ட அம்சங்கள் எல்லாம் கடமைகளாய் காத்திருக்கிறது.

குழந்தைகள் திருமணம் என வரும்போது அதை அனுபவிக்க வேண்டிய விஷயம் என்பதை காட்டிலும், நல்லபடியா நடத்தி ஆகணுமே என்ற ஒரு கேப்டன் புத்திதான் அப்போதும் தோன்றுகிறது. பேர குழந்தைகள்....? அதற்க்கு வெகு தூரம் இருக்கிறது நாம் அதுவரை இருப்போமா என்ற கேள்வியும் வருகிறது.

காலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போகும் நாற்பதுகளை கடந்த தொப்பை ஆசாமிகளை பார்த்து சிரித்திருக்கிறேன்....இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருப்பது குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்


>

21 comments:

டவுசர் பாண்டி... said...

பொறுப்பான குடும்ப தலைவனின் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும்...:)

நீங்கள் உணர்ந்ததை பதிவில் அருமையாய் உணர்த்தியிருக்கிறீர்கள்...

வாழ்த்துகள்...

sakthi said...

குழந்தைகளின் கல்வி , அவர்கள் ஆரோக்கியம், நகரத்தில் நாகரிகம் என்ற பெயரில் நிரம்பியிருக்கும் கலாசார குப்பைகளில் இருந்து அவர்களை காக்க வேண்டும் .

உண்மை தான்

sakthi said...

இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருந்த குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்

புரிந்ததா புரிந்தால் சரி

பொன் மாலை பொழுது said...

35 வயதில் இது கொஞ்சம் ஓவராக இல்லை ?

// உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காறது //

இதுதான் சாமி வாழ்க்கை.
கடமையும் செய்துகொண்டு வாழ்க்கையையும் அனுபவிப்பவர்களே
அதனை உணர்ந்தவர்கள்.
உணர்ந்து கொள்வீர்கள் நண்பரே!

அமுதா said...

/*முப்பத்தைந்து வயதில் அநேகமாக எல்லா முக்கியமான விசயங்களையும் அனுபவித்து விட்டதாகவே தோன்றுகிறது ..!*/
இதற்காகவே இறைவனுக்கு நன்றி சொல்லலாம்

கடமைகள் என்று நீங்கள் சொல்வதையெல்லாம் அனுபவித்து செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. வாழ்க்கை எந்த வயதிலும் வாழ்வதற்கே.... (பிறருக்கு இன்னல் விளைவிக்காதவரை...)

நட்புடன் ஜமால் said...

அனுபவிக்க ஒன்றும் இல்லையா

என்ன அண்ணா இது

குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் அனுபவிக்கனும் பின்னர் பேரப்பிள்ளைகள் - இன்னும் இன்னும்

நிறைய இருக்கு அண்ணே ...

வாழும் ஒவ்வொரு நொடியும் அனுபவிப்போம் :)

நிலாமதி said...

வாழ்க்கையை அலசி பார்த்து இருக்கிறீர்கள். பாராடுக்கள்.

ஹேமா said...

ஜீவன்..நிறையவே யோசிக்கிறீங்க.பொறுப்புள்ள மனிதனாய் இருக்கிறோம்ன்னு சொல்லும்போதே நிறைவான கடமைகளோடு இருக்கிறோம்னு.
அப்புறம் எப்பிடி ஓய்வு.

அப்பா அம்மாவோடு இருக்கிற வரைக்கும்தான் அவர்கள் தலையில் எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்துவிட்டு எல்லாவற்றிற்கும் அவர்களையே சார்ந்து நிற்போம்.எங்களுக்கென்று வாழ்வு தொடங்கியபின் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் கடமைகளும் அதற்கான பிரயாசைகளும் தொடர்ந்தபடிதான்.முடிவு என்பது முடியாமலே முடியும்வரை !

ஆனால் எதையும் கடமை என்று இல்லாமல் அன்போடும் அக்கறையோடும் செய்துகொண்டிருப்போமேயானால் வாழ்வு வசந்தமே தவிர அலுப்பாயிருக்காது.

Thamira said...

புள்ளைகளை ஆளாக்கணும், அம்புடுதான். அதைப்போய் இன்னா பில்ட் அப் குடுத்து எழுதிருக்கீறேய்யா.. அதும்பாட்டுக்கு வளரும், உட்டுத்தள்ளுங்க.!

(அதுவும் ரசனையான, அனுபவிக்க வேண்டிய விஷயம்தான் தோழரே. ஆமான்னா உலகில் எல்லாமே ரசனைதான், இல்லைன்னா இல்லை.)

priyamudanprabu said...

வாழும் ஒவ்வொரு நொடியும் அனுபவிப்போம் :)

///////////

ஆமா ஜமால்

priyamudanprabu said...

காலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போகும் நாற்பதுகளை கடந்த தொப்பை ஆசாமிகளை பார்த்து சிரித்திருக்கிறேன்....இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருப்பது குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்

.//////

அருமையா இருக்குங்க

நடக்கும் எல்ல நிகழ்வுகளையும் மகிழ்வாக அனுப்வித்தால் வாழ்க்கை இனிக்கும்

அழுகையும் சுகமாகும்

vasu balaji said...

/இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருந்த குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்//

இப்படி வேற இருக்கோ:)

ILA (a) இளா said...

ஜமால் சொன்னதை வழிமொழிகிறேன். விட்டதை எல்லாம் இனிமேதாங்க பிடிக்க முடியும். சலிச்சுக்க முடியாதுங்க..என்ன அங்கிள்னு சின்னப் பொடிசுங்க கூப்பிடும்போது வலிக்கும். அது சரி, சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?

ஜெயந்தி said...

வயதானவர்களுக்கும் கடமைகள் இருக்கு. நாம் உயிர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஏதாவது ஒரு செயல் காத்திருக்கிறது. அதுக்குள்ள சலிச்சுக்கிட்டா எப்படி?

Rajeswari said...

உண்மை!

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிமிடம் வந்துபோகும் எண்ணம்தான் இது இயல்பானது மற்றபடி குழந்தைகளை கவனமாக நகர அல்லது நரக நாகரீகத்திலிருந்து கண்டிப்பாக காப்பற்றவேண்டும்... இன்னும் நிறைய வாழ்க்கையில் ரசிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கும்பொழுது இப்போதே சலித்தால் எப்டி?

Anonymous said...

பொதுவாய் மலரும் நினைவுகளை அசை போட்டு பார்த்து வருந்தி சந்தோஷப்பட்டு இவைகள் தான் நிகழும் எதிர் காலத்தை திட்டமிடுவோம் நீங்களும் அதை கற்பனையில் ஒரு வெள்ளோட்டமாய் பார்த்து அதை அப்படியே வடித்து இருக்கீங்க....தொப்பை அவன் கடந்த காலத்தை காட்டும்..காலை நடை பயிற்சி அவன் கடமை தவறவில்லை என சொல்லுமோ ? நாங்க நெனைச்சி வாழ்வதை நீங்க பதிவா எழுதி விட்டீங்க தமிழ் ...

Anonymous said...

35+லும் அனுபவிக்கலாம் தமிழ் ஆயுள் முடிவின் கடைசி நொடி வரை அனுபவிக்கலாம் வாழ்க்யை ரசிக்க பழகிகிட்டா.......

TBR. JOSPEH said...

சில சமயம் தோன்றும் அயர்ச்சியில் இப்படி கூட நினைப்பதுண்டு சட்டென ஒரு பத்து வருடம் போய்விடாதா என்று ...! //

நானும் உங்களுடைய வயதில் இப்படி நினைத்திருக்கிறேன். பிள்ளைகள் எப்போது வளர்ந்து ஆளாவார்கள் என்று... ஆனால் இப்போது அவர்கள் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது! இக்கரைக்கு அக்கரர பச்சை.

விஜய் said...

" கிராமங்களைவிட புவியீர்ப்பு விசை குறைவான நகரத்தில் இருந்துகொண்டு கிராமங்களின் ஈர்ப்பினை புரியவைக்க வேண்டும் "

நச்

வாழ்த்துக்கள்

விஜய்

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்