ஜீவன் பிரியும் சுகமான தருணம் ...!!

ஒரு இளனி கொடுத்து பார்க்கலாமா?

இல்ல கொஞ்சம் நல்லெண்ணைய வாயில ஊத்தி விட்டா முடிஞ்சுடும்னு சொல்லுறாங்க !

ரெண்டு நாளா இப்படி இழுத்துகிட்டு இருக்கே? கெழத்துக்கு நெறைய ஆசைபோல அதான் இப்படி இழுத்துகிட்டு கெடக்கு!

ஈனஸ்வரத்தில் எனக்கு கேட்கத்தான் செய்தது! தலை அருகில் அமர்ந்து ஒரு ஜீவன் மட்டும் கவலையுடன் எனக்கு விசிறி விட்டு கொண்டு இருக்க ....!!!

இன்னிக்குள்ள முடிஞ்சுடும் முடிஞ்சுட்டா நைட்டு பார்ட்டிதான் ,கச்சேரிதான் என் பேரன் யாரிடமோ செல்போனில்........!!

டேய்..! எது பேசினாலும் வெளில போய் பேசு பாட்டி கேட்டா வருத்தப்படும் ....இது என் மகள்!!!

என்ன தான் சொல்லுறாரு தாத்தா போவாரா? போக மாட்டாரா ? குறும்புடன் யாரோ ஒரு உறவுக்கார இளைஞன்.........!!!---என் ''வயதில்'' நானும் இப்படி பேசி இருக்கிறேன்.

எல்லோர் முகத்திலேயும் ஒரு ஆர்வமும் சோர்வும்!

நேரம் செல்கிறது உள்ளே ஒரு மாற்றம்!

எழுந்து அமர்கிறேன் என்ன ?? இது ?? அசைய கூட முடியாத என்னால் எழுந்து அமர முடிகிறதே ?? இல்லை !!இல்லை !! நான்தான் எழுந்து அமர்கிறேன் என் உடல் அசையவில்லை புரிந்து விட்டது!! ''தருணம் வந்து விட்டது!'' ஆஹா...! என்ன ஒரு குளிர்ச்சி....!! என்ன ஒரு அற்புதமான உணர்வு........! அசைய கூட திராணியற்ற வயோதிக உடலிலிருந்து பறவை போன்ற சுறுசுறுப்புடன் எழ முடிகிறதே ...! அட... அற்புதமே .....!! ஆனந்தம் ...பேரானந்தம் ...! இப்போது ''அந்த'' உடலை பார்த்து முன்னர் சிரித்து கொண்டிருந்தவர்களும் கலங்கி நிற்க........ நான் சிரித்து கொள்கிறேன்..!

பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!




>

5 comments:

ஹேமா said...

ம்...மரணம் வாழ்வதைவிட சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்குமென்று சொல்கிறீர்கள்.
அனுபவிச்சுப் பார்க்க ஆசைதான் !

நட்புடன் ஜமால் said...

என்னாச்சிங்க்ண்ணா...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அற்புதம் தமிழ் அமுதன் சார்,

ஒவ்வொருவரும் இந்த தருணத்தை வாழ்வில் சந்தித்துத் தானே ஆக வேண்டும் ?

ஆனாலும் நிலையாமையை உணராத சமுதாயம் மரணத் தருவாயில் இருப்பவரை அவருக்கு கேட்காது என நினைத்தோ அல்லது கேட்டுவிட்டுத்தான் போகிறது என நினைத்தோ இப்படி பேசுவது கொஞ்சம் வருத்தம் தான்..

ம்ம்.. நாளைக்கு நமக்கும் இப்படித் தான் என்று ஒவ்வொருவரையும் தங்களது இந்த ஆக்கம் உணரச் செய்யும்..

அதுபோல இறுதி வரிகள் சூப்பர்,

பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

வாழ்த்துக்கள்.
அன்புடன் - சி.மா.ஜா.

http://sivaayasivaa.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!//
ஜீவன் பிரியும் சுகமான தருணம் ....

Yaathoramani.blogspot.com said...

நல்ல கற்பனை நல்ல நடை நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
(கண்ணாடி-தலைப்பும் அதற்கான விளக்கமும்
மிக மிக அருமை)